அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
மக்களுக்கான எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள், நீதித்துறை புனரமைப்பு மற்றும் அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள் வருமாறு,
ஜனாதிபதி - 6 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் திட்டவட்டமான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை..!
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
சிறைச்சாலை அமைப்பில் மிக முக்கியமான தலைமைப் பதவி காலியாகி ஒரு வருடமும் இரண்டு மூன்று மாதங்களும் ஆகப்போவதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், "உடம்பு இருக்கின்ற போதிலும் அதற்குத் தலை இல்லை" என்று விமர்சித்தார்.
முன்னாள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்த போதிலும், அரசு அதனைச் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்கப்படாவிட்டால் அவ்வாணைக்குழுவினால் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 11 ஆயிரம் கைதிகளுக்கு மட்டுமே வசதிகள் உள்ள சிறைச்சாலைகளில், அதைவிடப் பன்மடங்கு அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவல நிலைக்கு அரசே பொறுப்பேற்று உடனடியாகப் புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான புதிய சட்டங்கள் தனிநபர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்று சாடிய அவர், இத்தகைய முக்கிய தீர்மானங்கள் மக்கள் தீர்ப்பு மூலமே எடுக்கப்பட வேண்டும் என்றார்.
ராஜித சேனாரத்ன
சிறைச்சாலைகளில் கைதிகள் சால்மன் மீன் டின்னுக்குள் அடைத்து வைக்கப்பட்டது போல் பெரும் நெருக்கடியில் வாழ்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தானும் சிறைக்குச் சென்று வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், அடிப்படை மலசலகூட வசதிகள்கூட இல்லாத இவ்வாறான சூழல் ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறும் என்றும் எச்சரித்தார்.
கடந்த காலத்தில் தமது அரசே சிறைச்சாலைகளைப் புனரமைத்து வசதிகளை மேம்படுத்தியது என்றும், தற்போதைய அரசு அதனை முற்றாகப் புறக்கணித்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சுரேஷ் ராகவன்
நாட்டில் தற்போது ஒரு 'சைபர் பண்ணை' இயங்கி வருகின்றது என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேஷ் ராகவன், அரசை விமர்சித்து கருத்துத் தெரிவித்தவுடனே சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு "ஹாஹா" எதிர்வினைகள் இடப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியை 'குப்பைகள்' என விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், அரசு நாட்டின் அண்மைய வரலாற்றையாவது மதித்து நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரேமநாத் சி. தொலவத்த
இந்த அரசே திட்டமிட்டு நாட்டைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் பிரேமநாத் சி. தொலவத்த குற்றம்சாட்டினார். சிறைச்சாலை நெருக்கடியிலும் மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அரசு தலைவணங்குவதில்லை என்றார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஏராளமான நீதியரசர்கள் காலியிடங்கள் நிலவுவதால் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், தமக்குச் சாதகமான தீர்மானங்களை எடுக்கும் நபர்களை மட்டுமே அரசு தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கின்றது என்றும் தெரிவித்தார்.
எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக இந்தக் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.