நிறுவனமொன்றிடமிருந்து இரண்டரை பில்லியன் டொலர்களை கடனாக பெறும் அரசாங்கம்
இலங்கையிடம் தற்போது, அந்நிய செலாவணி கையிருப்பாக 2 ஆயிரத்து 581 மில்லியன் டொலர் மாத்திரமே இருப்பதாகவும் எனினும் கடனை செலுத்த 7 ஆயிரத்து 247 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,பொருளாதார துறை கலாநிதியுமான ஹர்ச டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த கடனை செலுத்துவதற்காக கென்ஸ்செப்ட் குளோப் என்ற நிறுவனத்திடம் இருந்து இரண்டரை பில்லியன் டொலர்களை கடனாக பெற அமைச்சரவை தீர்மானித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தளவுக்கு பெருந்தொகை கடனை வழங்கும் நிறுவனம் கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இருக்கும் சிறிய வீடொன்றில் அமைந்துள்ளது. அதனை நான் பார்வையிட சென்றேன்.
அந்த வீட்டின் உரிமையாளர் எந்தவிதமான நிறுவனத்தின் உரிமையாளரோ, பிரதான அதிகாரியோ அல்ல. எனினும் அமைச்சரவை அந்த நபரின் பெயருக்கு குறித்த கடனில் 7 வீதத்தை அதாவது 175 மில்லியன் டொலரை தரகு பணமாக வழங்க அனுமதி வழங்கியுள்ளது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.