பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சி!
பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொழுந்து பற்றாக்குறையினால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதியளவால் குறைவடைந்துள்ளதால் அந்நியச் செலாவணி சுமார் 40 சதவீதம் நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாதாந்த ஏற்றுமதி
மாதாந்தம் தேயிலை ஏற்றுமதி மூலம் 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்ட போதிலும் ஏற்பட்டுள்ள கொழுந்து பற்றாக்குறையினால் 50 மில்லியன் டொலர் வரை நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட தேயிலை ஆலோசகரும் தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
கடுமையான வறட்சி மற்றும் உரப் பற்றாக்குறை காரணமாக பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு பருவத்தில் ஒரு மரத்தில் இருந்து 03 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து அறுவடை பெறப்பட்ட போதிலும் அந்த அளவு பாதியளவாகக் குறைந்துள்ளதாகவும் ஒரு ஏக்கரில் இருந்து கிடைக்கப்பெறும் 400 கிலோகிராம் பச்சைத் தேயிலைக் கொழுந்து அறுவடை 200 கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.