சற்று முன்னர் பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமானது தமிழ்நாட்டு தேர்தலின் வாக்கு எண்ணிக்கை!
புதிய இணைப்பு
தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருந்த 2026ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 18,000 துணை இராணுவப் படையினர் மற்றும் 1 இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு
தமிழ்நாட்டின் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளன.
இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணும் இடங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
தமிழ்நாட்டின் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
இதற்கமைய, காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வாக்கு எண்ணிக்கை இடம்பெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டின் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு 234 தொகுதிகளிலும் ஆரம்பமாக உள்ளது.
பல வாரங்களாக நடைபெற்ற தீவிர தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விறுவிறுப்பான வாக்குப்பதிவைத் தொடர்ந்து, தொடக்கக்கால முன்னிலை நிலவரங்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என்றும், ஊடகங்கள் வாயிலாக நேரலைத் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று திருப்பம்..
ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வாக்குப்பதிவுகளில் ஒன்றாக 84.8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தனது ஆட்சி நிர்வாகம் மற்றும் நலத்திட்டங்களை முன்வைத்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அதே வேளையில், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), மீண்டும் ஆட்சப்பீடத்தில் அமர இலக்கு வைத்துள்ளது.
நடிகர், விஜயின் தமிழக வெற்றி கழகம் (தவெக), குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஒரு முக்கிய புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
இது இந்தத் தேர்தல் போட்டியில் ஒரு கணிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ளன.
அதிக எதிர்பார்ப்பு
சில கணிப்புகள் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்று கூறுகின்றன. மற்ற சில கணிப்புகள் தனது முதல் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றி கழகம் எதிர்பாராத அளவிற்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகின்றன.

அதேநேரம், சில கணிப்புகள் தவெக குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றும் என்று கூறினாலும், மற்றவை அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்புகள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் காரணியாக இருக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மாத்திரமன்றி சர்வதேச பரப்பிலும் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.