அழிவுப் பாதையில் தமிழரசுக் கட்சி! என்.பி.பியுடன் அணிதிரளும் வடக்கு மக்கள் - பிமல் பெருமிதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இனிவரும் காலங்களில் வடக்கில் மீண்டெழ வாய்ப்பில்லை எனவும், அந்தகட்சியின் உட்பூசல்கள் அதனை அழிவுப்பாதையை நோக்கியே இட்டுச் செல்கின்றன எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
வடக்கு மக்கள் தற்போது இனவாத அரசியலை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியுடன் அணிதிரண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
சுமந்திரன் - சிறீதரன்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் சுமந்திரன் - சிறீதரன் இடையிலான அதிகாரப் போட்டி இன்று வீதிக்கு வந்துள்ளது. இவர்களின் தனிப்பட்ட மோதலால் கட்சி பலவீனமடைந்துள்ளது.

இதனைப் புரிந்துகொண்ட வடக்கு மக்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சித் தகுந்த பாடத்தைப் புகட்டியுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் நிலைகுலைந்துள்ள சுமந்திரன், தற்போது மீண்டும் இனவாதத்தைக் கையில் எடுத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றார். வடக்கின் அபிவிருத்திப் பணிகளை முடக்கும் நோக்குடன் அவர் மக்களைப் போராட்டங்களுக்குத் தூண்டிவிடுகின்றார்.
வடக்கின் மாற்றம்
ஆனால், வடக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர். வடக்கின் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள். அதனால்தான் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் இன்று அணிதிரண்டு நிற்கின்றார்கள்.

எமது ஜனாதிபதி மற்றும் அரசின் மீது வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம். அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் அனைத்துக்கும் எமது அரசு நிலையான தீர்வுகளை வழங்கியே தீரும் என குறிப்பிட்டுள்ளார்.