அநுர அரசுக்கு நாமல் விடுத்துள்ள பகிரங்க சவால்
"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அநுர அரசு குறிப்பிடுகின்றது, அவ்வாறாயின் இந்த அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள்
கொழும்பில் நேற்று(8) திங்கட்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் தேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

"இனவாதம் பரப்பவில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு அரசு மறைமுகமாக இனவாதக் கருத்துக்களைப் பரப்பி விடுகின்றது. நாங்கள் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுவது இனவாதமாக அமையாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் தமக்கு நல்லதொரு நிலைப்பாடு இருப்பதாக அரசு குறிப்பிடுகின்றது. அவ்வாறாயின் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை அரசு பரிசீலிக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல்
ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதா என்பதை ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை முன்வைக்கும் யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சியில் இருந்து பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டள்ளன. ஆனால் ஆளும் தரப்பில் இருந்து இதுவரையில் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கம் இந்த அரசுக்குக் கிடையாது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.