குடியேற்றக் கொள்கையை மாற்றுமா..! சுவிட்சர்லாந்தில் பரபரப்பான வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகையை ஒரு கோடிக்குள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் வாக்கெடுப்பு இன்று (14) நடைபெறுகிறது.
இந்த வாக்கெடுப்பு, குடியேற்றக் கொள்கை, பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுவிட்சர்லாந்தின் உறவுகள் தொடர்பாக நாட்டில் தீவிர அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மொத்த சனத்தொகை
வலதுசாரி அரசியல் இயக்கமான சுவிஸ் மக்கள் கட்சியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முன்மொழிவு, நாட்டின் வீட்டு வசதி, போக்குவரத்து உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் வளங்கள் மீதான சுமையைக் குறைக்கும் முயற்சியாக ஆதரவாளர்களால் விளக்கப்படுகிறது.

ஆனால், சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கம், பிரதான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிக அமைப்புகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, சுகாதாரம், சுற்றுலா மற்றும் சேவைத் துறைகள் பெருமளவில் வெளிநாட்டு பணியாளர்களைச் சார்ந்துள்ள நிலையில், இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை உருவாகும் அபாயம் காணப்படுவதாக வணிகத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடியேற்றக் கொள்கை
மேலும், சனத்தொகை வரம்பு தொடர்பான இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான தற்போதைய ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இது சுவிட்சர்லாந்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2002 ஆம் ஆண்டில் சுமார் 73 இலட்சமாக இருந்த சுவிட்சர்லாந்தின் சனத்தொகை, தற்போது 91 இலட்சத்தை எட்டியுள்ளது.
இதில் சுமார் 27 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பின் முடிவு, சுவிட்சர்லாந்தின் எதிர்கால குடியேற்றக் கொள்கையையும், ஐரோப்பிய நாடுகளுடனான அதன் உறவுகளையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.