சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக தொடர் சத்தியாக்கிரகம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக இன்று(08) காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று (08) காலை பத்துமணியளவில் குறித்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சலேவுக்காக எழுந்து நில்லுங்கள்
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'சலேவுக்காக எழுந்து நில்லுங்கள்' (Standup for Sallay) என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் அடக்குமுறை மற்றும் ஒருதலைபட்சமான விசாரணை முறையிலிருந்து சுரேஷ் சலேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனை வலியுறுத்தும் வகையில் தொடர்ச்சியான சத்தியாகிரகப் போராட்டமொன்றை இன்று முதல் ஆரம்பிக்கவும் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.