கந்தளாயில் மோப்ப நாய்கள் உதவியுடன் திடீர் வாகன சோதனை..!
கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் விஜயவர்த்தனவின் நேரடி வேண்டுகோள் மற்றும் வழிகாட்டலுக்கு இணங்க, கந்தளாய் பகுதியில் இன்று (8) விசேட மற்றும் தீவிர திடீர் வாகன சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில், கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மாத்திரமன்றி, முக்கிய பகுதிகளிலும் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
சட்ட நடவடிக்கை
பேராறு , ரஜ எல சந்த, அனோமா சந்தி, 91 ம் கட்டை சந்தி போன்ற இடங்களில் இப் பரிசோதனைகள் முன்னேடுக்கப்பட்டது.
குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை இலக்கு வைத்தும், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி பயணிப்பவர்களைக் கண்டறிவதோடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பழக்கத்தை இப்பகுதியில் முற்றாகக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன்போது, போதைப்பொருட்களை மிகத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் விசேட பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த திடீர் சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய, போதைப்பொருள் சந்தேகத்திற்குரிய மற்றும் முறையான ஆவணங்களின்றி பயணித்த பலருக்கு எதிராக பொலிசாரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.