மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி : மரணச் சடங்கிற்கு வெடி கொழுத்த கட்டணம்
மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த பிரேரணையை தவிசாளர் கொண்டுவந்த நிலையில் அது தீர்மானமாக்கப்பட்டது.
தவிசாளர் தனது பிரேரணையில் கருத்து தெரிவிக்கையில், மரணச் சடங்குகளின் போது வீதிகளில் வெடி வெடிப்பதால் வீதிகள் அசுத்தமடைகின்றன. அவற்றை பிரதேச சபையே சுத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
கட்டணம் அறவீடு
எனவே அந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் குறித்த வெடிகளை வெடிப்பவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபா கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
அவர்கள் எமது பிரதேச சபைக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தி அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே வெடிகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சபையில் நீண்ட விவாதம், கருத்து முரண்பாடுகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், வெடி வெடிப்பது என்பது எமது மரபு. எமது மரபுகளுடனும், மக்களின் உணர்வுகளுடனும் விளையாடாதீர்கள்.
இந்த விடயத்திற்கு நான் எதிர்ப்பு என்று கூறியதுடன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் குறித்த பிரேரணையானது சபையில் நிறைவேற்றப்பட்டது.
தண்டப்பணம்
தண்டப்பணம் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானம் ஒன்றுக்கான தண்டப்பணத்தை பிரதேச சபை அனுமதி மற்றும் காரணங்கள் இன்றி குறைத்ததால் இன்று மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வில் மணிக்கணக்காக அமளி துமளி ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நவாலியில் உள்ள சூரிய மின்னுற்பத்தி திட்டம் ஒன்று தனியார் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு அது இயக்கப்பட்டு வருகிறது.
அதற்கு சபையில் அனுமதி பெறப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் அவருக்கு வங்கியில் கடன் பெறவேண்டிய தேவை உள்ளதால், குறித்த சூரிய மின்னுற்பத்தி கட்டுமானத்துக்கு பிரதேச சபையின் அனுமதி தேவை ஏற்பட்டது.
அனுமதி
அனுமதி இந்நிலையில் அனுமதிக்காக குறித்த நபர் பிரதேச சபையை நாடினார். இதன்போது அந்த அனுமதியை வழங்குவதற்கு தண்டப்பணமாக 11 இலட்சம் ரூபாவுக்கு மேலான தொகை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இருப்பினும் எந்தவிதமான அனுமதியும் இன்றி UDA கூட்டத்தில் அந்த தொகையானது குறைக்கப்பட்டு அண்ணளவாக 5 இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை தண்டமாக அறவிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த தொகை எந்த அடிப்படையில் குறைக்கப்பட்டது என்றும், இதன்மூலம் யார் மறைமுகமாக கையூட்டு பெற்றுள்ளார்கள் என்றும், UDA கூட்ட ஆவணம் உடனடியாக சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.
மேலும், இது குறித்து உள்ளக விசாரணை செய்வதாக தவிசாளர் கூறியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த உறுப்பினர்கள் விசாரணை செய்ய வெளியில் இருந்து விசாரணை குழு ஒன்று அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கலந்துரையாடல்
குழுநிலை கலந்துரையாடல் கூட்டத்தின்போது இடையிடையே பல தடவைகள் உறுப்பினர்கள் UDA ஆவணத்தை கொண்டு வருமாறு கூறிய நிலையில் கூட்டத்தின் இறுதியில் அந்த ஆவணம் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் அதில் காரணம் எதுவும் குறிப்பிடப்படாமலேயே தண்டப்பணம் குறைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து தரப்பினரும் இருப்பதால் சபையில் இது குறித்து பேசாமல் குழுநிலை கலந்துரையாடலில் பேசலாம் என செயலாளர் சபேசன் கூறினார். அதற்கு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
சிகையலங்காரம்
பாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக சிகையலங்காரம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(20.02.2026) இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிகையலங்கார பிரச்சினையால் பல பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.

ஆகவே சாதாரண மக்களுக்கு சிகையலங்காரம் செய்கின்றது போன்று பாடசாலை மாணவர்களுக்கு சிகையலங்காரம் செய்ய கூடாது.
ஆகவே எமது பிரதேசத்தில் இருக்கின்ற சிகையலங்கார சங்கத்துடன் நாங்கள் இதுபற்றி கலந்துரையாடுவோம். அவர்கள் நிச்சயமாக இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
ஏனெனில் அவர்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள். ஆகவே, இந்த தீர்மானத்தின் மூலம் நாங்கள் அதனை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam