தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்தி
இலங்கையில் திரிபோஷா உற்பத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் கிடைக்காததால் இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளதாக அவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் முன்னர் வழங்கப்பட்டிருந்தாலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் ஒப்புதலுக்கு திருத்தங்களை சமர்ப்பித்திருந்தார்.
மக்காச்சோளம் இறக்குமதி
அந்தத் திருத்தங்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒக்டோபர் 07 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறும் வரை மக்காச்சோள இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக அமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
இதன் விளைவாக, திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பிறகு மக்காச்சோளம் இறக்குமதி மீண்டும் தொடங்கியதும் திரிபோஷா உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் கூறியுள்ளார்.



