யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் தொடர்பான சர்ச்சை - வெளியான ஆதாரம்
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பதை சிறுவனின் வீட்டார் உறுதி செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸாரின் கட்டளையை மீறி செலுத்தி சென்ற வாகனத்தின் மீது நேற்று முன் தினம்(10.02.2026) பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய விடயம்
இந்த சம்பவத்தில் காயமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இவ்வாறான சூழலில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (11.02.2026) பொலிஸார் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

அந்த அறிக்கையில் உயிரிழந்தவர் 19 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் சர்ச்சைக்கு உள்ளானது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் உயிரிழந்தவரின் வீட்டில் கேட்டறிந்த போது, உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி பிறந்தவர் எனவும், அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 9ஆம் திகதிக்கு பின்னரே அவருக்கு 18 வயதாக உள்ளதாகவும், தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றதாகவும் கூறியுள்ளனர்.


மேலதிக தகவல் - தீபன்