ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழா
இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியக் குழு ஆகியவை இணைந்து 67ஆவது முறையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
அரச விருதுகள்
2025ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய எழுத்தாளர்களைப் பாராட்டி, 50 இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அரச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றியமைக்காக, வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகின்ற உயரிய 'சாஹித்யரத்ன' கௌரவ விருதுகள் மூன்று மொழிப் படைப்பாளிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டன.
சிங்கள மொழிப் பிரிவில் பராக்கிரம கொடித்துவக்குக்கும், தமிழ் மொழிப் பிரிவில் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில் பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது
இதன்போது 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர் மற்றும் மும்மொழிகளிலான 2026 இலக்கிய இதழ் ஆகியவை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன், நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.







நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24