தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நிவர்த்திக்க அநுரவிடம் கோரிக்கை..
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெறும் சட்டத்திருத்தங்கள் மட்டும் போதாது. தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நிவர்த்தி செய்வதும், பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதுமே உண்மையான தீர்வாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(07.06.2026) நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத் திருத்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவசரகாலச் சட்டத்தை கடந்த காலங்களில் மோசமாகப் பயன்படுத்தியவர்கள், இன்று அதன் நீடிப்பு பற்றிப் பேசுவது வேடிக்கையானது.
இந்த அரசு பதவிக்கு வந்தபோது இருந்த நம்பிக்கை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாத காரணத்தால் இப்போது எம்மத்தியில் குறைந்துகொண்டு போகின்றது.

மேலும், வடக்கு - கிழக்கு பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் அறவே இல்லை. தாயகப் பிரதேசத்தில் சிறு அல்லது பாரிய முதலீட்டுத் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
நிலத்தைப் பெறுவதில் உள்ள நிர்வாகச் சிக்கல்களால் முதலீட்டாளர்கள் வருடக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இந்திய அரசு காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக வழங்கிய 2 ஆயிரத்து 200 கோடி ரூபா நிதி பயன்படுத்தப்படாமல், ஆரம்ப வேலைகள் கூடத் தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.
அத்துடன், திருகோணமலை எரிபொருள் சேமிப்பு வசதி தொடர்பாக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கை இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாணப் போக்குவரத்துப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துகள் இடையே நிலவும் மோதல்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த நேர அட்டவணை அவசியம்.
வவுனியா பேருந்து நிலையத்தின் நிர்வாகத்தை தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து பறித்து, வடக்கு மாகாணப் போக்குவரத்து அதிகார சபையிடம் ஒப்படைக்க வேண்டும்.
வவுனியா பேருந்து நிலையத்தின் பராமரிப்பை வவுனியா மாநகர சபையிடம் ஒப்படைப்பதன் மூலம், அதன் வருமானத்தை மக்கள் சேவைக்குப் பயன்படுத்த முடியும்.
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையில் 20 வீதக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும்போது, ஏற்கனவே அதிக பேருந்துகளைக் கொண்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தத் தவறினால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு அரசாங்கமே பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.