வேட்டையாடிகள் சிக்குகின்றனர் வேட்டைக்காரர்கள் தப்புகின்றனர்: சுட்டிக்காட்டும் சிறீநேசன் எம்.பி.
"தமிழின அழிப்பு விடயத்தில் வேட்டையாடிகள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், வேட்டைக்கு ஆணையிட்ட வேட்டைக்காரர்கள் இன்னும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இது விடயத்தில் அம்புகள் மாட்டிக் கொண்டுள்ளன. எய்தவர்கள் இதுவரை கைதாகவில்லை" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இந்தக் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தம்
அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இறுதி யுத்தம் 2005இல் இருந்து 2009 வரை தீவிரமாக நடைபெற்றது. அதன்போது மனிதக் கடத்தல், சித்திரவதைகள், காணாமல் ஆக்குதல் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அதற்குக் கருவிகளாகச் செயற்பட்டதாகக் கூறப்படுவோர் இந்த ஆட்சியில் கைதாகி வருகின்றனர் . ஆனால், கர்த்தார்களாக இருந்த இயக்குநர்கள் இன்னும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர். மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்திலும் அம்புகள் அகப்படுகின்றனர். தொடுத்த வில்லர்கள் இன்னும் கைதாகவில்லை.
எனவே, இந்த விடயத்தில் நாசகார வேலைகளின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை அளிப்பதற்கு உதவும். மாறாக வேட்டையாடிகளை மாத்திரம் கைது செய்வதால், நீதி கிடைக்கப் போவதில்லை.
நாட்டின் சாபக்கேடு
1956 இல் இருந்து 2015 வரை இன அழிப்பில் ஈடுபட்ட வேட்டைக்காரர்களோ, வேட்டையாடிகளோ இதுவரை தண்டிக்கப்படாத குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் அதியுச்சப் பதவிகளையும் வகித்து வந்துள்ளனர். இவைதான் இந்த நாட்டின் சாபக்கோடாகவுள்ளது. இதனால் குற்றவாளிகளின் ஆளுகையினால் நாடு குட்டிச்சுவராகியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஊழல், மோசடிகள், கொள்ளை, கொலை தாண்டவமாடியதால் நாடு நாசமாக்கப்பட்டுள்ளது. பாரிய குற்றச் செயல்களுக்கான பெரிய பெருந்தலைகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தகுதி தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான மனிதப் படுகொலைகளுக்கான பெருந்தலைகள் மறைக்கப்படும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பு இல்லை. குற்றச் செயல்களுக்கான சூழலை உருவாக்குதல், குற்றங்களைச் செய்ய வாய்ப்பளித்தல், குற்றவாளிகளைப் பாதுகாத்தல், குற்றவாளிகள் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்தல் என்பன நடைபெறுவதால் இந்த நாட்டில் தீர்வுக்கான உள்நாட்டுப் பொறிமுறை உருக்குலைந்து போயுள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
பொதுமன்னிப்பில் விடுதலை
வெலிக்கடைப் படுகொலைக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் விமானக் கடத்தலில் ஈடுபட்ட சிங்களக் கைதி மற்றும் மிருசுவில் படுகொலையாளியும் மரண தண்டனைக் குற்றவாளியுமான சுனில் ஆகியோர் ஜனாதிபதிகளின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதும் பாரிய குற்றவாளிகளை இனவாத ரீதியில் பாதுகாக்கும் செயல்களாக அமைந்தன.
எனவே மனிதக் கடத்தல் காணாமல் ஆக்குதல், படுகொலைகள், வதைகள், உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் போன்ற பாரிய குற்றங்களுக்குக் கால்கோளிட்ட சூத்திரதாரிகள் வெளிச்சப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அம்புகள், வேட்டையாடிகளை மாத்திரம் தண்டிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ, பரிகாரமோ கிடைக்காது. மனிதமும் நீதியும் செத்தால் சனநாயகம் பிணநாயகம் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா



