கோட்டாபயவிற்கு எதிரான போராட்டத்தில் மௌனம் காக்கும் தமிழ்த்தேசியக் கட்சி
கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி தென் இலங்கையில் நடத்தப்பட்டபோராட்டங்களை ஒரு கிளர்ச்சியின் வெளிப்பாடுகளாக மட்டுமே ஈழத்தமிழர்கள் அணுக வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொள்கைகள் அற்ற அரசியல் புரட்சி
நாட்டில் இடம்பெறும் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகின்றது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இக்கிளர்ச்சி கடந்த சனிக்கிழமை ஒன்பதாம் திகதியன்று மேலும் ஒரு தற்காலிக
வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
ஆனால், இந்தக் கிளர்ச்சியை இயக்கியவர்களால் ஓர் அரசியல் புரட்சியாக மாற்ற
முடியாமல் போனதை ஈழத்தமிழர்கள் இரண்டு காரணங்கள் ஊடாக நோக்க வேண்டும்.
ஒன்று - இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை (Unitary State Constitution) மாற்ற விரும்பாமை. அதாவது தமிழ், முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பங்கீட்டு (Power Sharing) முறைகளை உருவாக்க ஒத்துக் கொள்ளாமை.
இரண்டாவது - அரசியல் யாப்பில் பௌத்த சமயத்துக்கான முன்னுரிமையை அல்லது பௌத்த ஆதிக்கத்தை இழக்க விரும்பாமை.
கிளர்ச்சிக்கு பின்னால் இயங்கிய அமைப்புகள்
காலிமுகத்திடல் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு இந்த இரு விளக்கங்களும்அரசியல் ரீதியாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கிளர்ச்சிக்குப் பின்னால் நின்று இயக்கிய சில அமைப்புகள், மேற்படி இரு காரணங்களின் அடிப்படையிலேயே அந்தக் கிளர்ச்சியை அரசியல் புரட்சியாக மாற்றாமல் வெறுமனே கிளர்ச்சியாக மாத்திரம் மடைமாற்றியிருந்தார்கள் என்பது கண்கூடு.
அதவது ராஜபக்ச குடும்பத்தைத் துரத்திவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்ற கருத்தையே சிங்கள இளைஞர்களுக்குக் கிளர்ச்சியின் பின் நின்று இயக்கியவர்கள் போதித்திருக்கிறார்கள். இதனால் தான் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஆரம்பம் முதல் ஒன்பதாம் திகதி வரையான கிளர்ச்சியில் பங்குகொள்ளவில்லை.

ஆனால் வடக்குக் கிழக்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அல்லது மட்டக்களப்பு, திருகோணமலைப் பிரதேசங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் ஒன்றுகூடி அரசியல் பிரகடணம் ஒன்றைச் செய்திருக்க வேண்டும். அதாவது ஒன்பதாம் திகதியோடு இலங்கை அரசியல் யாப்பின் நியாயாதிக்கம் தகர ஆரம்பித்துள்ளது.
போராட்டத்தில் மௌனம் காக்கும் தமிழ்த்தேசியக் கட்சி
தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்கூகூட்டி வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வுக்கும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்துக்கும் ஏற்ப பிரகடணத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.
குறிப்பிட்டுச் சொல்வதானால் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நிறுவதற்கான அரசியல் புரட்சியை அகிம்சை வழியில் கன கச்சிதமாகச் கையாண்டிருக்க வேண்டிருக்க வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டும், இலங்கை நாடாளுமன்றத்தின் மூலமும் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதன் அடிப்படையே தமிழ்த்தேசியக் கோட்பாடு.
ஆனால் அந்த அடிப்படையை நிறுவுவதக்கான நல்ல சந்தர்ப்பத்தைத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளும் பயன்படுத்தத் தவறியுள்ளன.
இலங்கைத்தீவுக்கான அரசியல் புரட்சி
அவ்வாறு அரசியல் புரட்சியாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கிலேதான் பௌத்த குருமார் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர், பௌத்த தேசியம் மற்றும் பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது என்றும், அது நிலையானது எனவும் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

பௌத்த தேசிய சக்தியை ராஜபக்ச குடும்பம் இழந்ததினாலேயே மக்கள் கிளர்ச்சி செய்து துரத்தியதாகவும் மார்தட்டியிருந்தார். ஆகவே காலிமுகத்திடல் போராட்டம் பெருளாதார நெருக்கடிக்கான கிளர்ச்சி மாத்திரமே என்பது இங்கு நிரூபணமாகின்றது.
ஆனால் சென்ற ஒன்பதாம் திகதிக்குப் பின்னர், அரசியல் புரட்சியாக மாற்றி, முப்பது ஆண்டுகால போரும், 2009 இற்குப் பின்னரான பதின் மூன்று ஆண்டுகளிலும் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மயமாக்கல், அந்நியச் செலவானியைப் பெறுவதற்கான வளங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டமை போன்ற காரணங்களே, இன்றைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் என்பதை ஒன்றுகூடிச் சர்வதேசத்துக்குப் பகிரங்கப்படுத்திருக்க வேண்டும்.
வடக்கு,கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வு
இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வுடன் கூடிய அரசியல் யாப்பு மாற்றத்துக்கான பிரகடணத்தை ஜனநாயக முறையில் தமிழ்த்தேசியக் கட்சிகள் மேற்கொண்டிருந்தால், இன்று இலங்கைத்தீவில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.
சிங்கள ஆட்சியாளர்களின் மனச்சாட்சியும் பகிரங்கப்பட்டிருக்கும். அதாவது உண்மை உலகத்துக்குப் புரிந்திருக்கும் ஆகவே அரசியல் புரட்சியாக மாற்றத் தவறிய தமிழ்த்தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் முன்னிலையில் தற்போது அம்பலப்பட்டிருக்கிறார்கள் கள்ள மௌனத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை உலகமும் அறிந்திருக்கும்.

தேர்தலில் போட்டியிடுவதும், தேர்தலுக்காவே தமிழ்த்தேசியத்தைப் பேசுகிறார்கள் என்பதையும், ஜூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான அரசியல் சூழல், தமிழ் மக்கள் முன்னிலையில் தமிழ்த்தேசியக் கட்சிகளைப் புடம்போட்டுக் காண்பித்துள்ளன.
2009 இன் பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குத் தலைமை இல்லை என்பதையே,
2022 யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான சூழல் கோடு காட்டியுமிருக்கின்றது
என்றால் அது மிகையாகாது.