இலங்கையில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன்: அபாய கட்டத்தில் பொதுச் சுகாதாரம்!
இலங்கையின் வயது வந்தோரில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகம் இணைந்து 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஆண்களை விட பெண்களிடையே உடல் பருமன் வீதம் சுமார் 10% அதிகமாகக் காணப்படுகிறது.
நீரிழிவு தொடர்பான மரணங்கள்
சிறுவர்களிடையே இந்த பாதிப்பு குறைவாக இருந்தாலும், சுமார் 12 சதவீத பதின்ம வயதினர் (Adolescents) அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளனர்.
இலங்கையின் மொத்த மரணங்களில் 84 சதவீதம் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களாலேயே ஏற்படுகின்றன.

2009 முதல் 2019 வரையான காலப்பகுதியில் நீரிழிவு தொடர்பான மரணங்கள் மற்றும் இயலாமை 34.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
இலங்கையர்களின் தவறான உணவுப் பழக்கவழக்கங்களே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு
மேலும் மக்கள் அதிகளவில் சோறு மற்றும் மாப்பொருள் சார்ந்த உணவுகளையே உட்கொள்கின்றனர்.
உலக சுகாதார ஸ்தாபானம் பரிந்துரைத்த அளவில் பழங்கள் மற்றும் மரக்கறிகளை உட்கொள்பவர்கள் இலங்கையில் வெறும் 27.5 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

நாட்டில் ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவும் அதேவேளை, மறுபுறம் தவறான உணவு முறையால் உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன.