விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையர்! அகதியாக பதிவு செய்யப்பட்ட படகில் வந்ததாக நாடகம் (VIDEO)
இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை
இதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வழங்கியுள்ள நிலையில், இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைய வந்தாரா? அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல தனுஷ்கோடி தீடை பகுதிக்கு சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீடை பகுதிக்கு சென்றாரா? என பல்வேறு கோணங்களில் மரைன் பொலிஸார், கியூ பிரான்ச் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
குறித்த நபர் தனுஷ்கோடிக்கு அடுத்த தீடை பகுதியில் கடல் நீரில் நனைந்த படியே தஞ்சம் அடைந்திருந்தமையினால், அகதியென எண்ணி பொலிஸார் அழைத்து சென்று மண்டபம் அகதிகள் முகாமில் அடைத்து விடுவார்கள் என்ற நோக்கத்தோடு தீடை பகுதியில் தஞ்சமடைந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மரைன், கியூ பிரான்ச் பொலிஸாரின், மத்திய புலனாய்வுத் துறையின்
விசாரணையில் அவர் விமானத்தில் வீசா மூலம் இலங்கை, கொழும்பில் இருந்து சென்னை வந்து பின்னர்
அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று காலை ராமேஸ்வரம் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எச்சரிக்கப்பட்டு விடுவிப்பு
தற்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வீசா மூலம் வந்தது உறுதியானதை அடுத்து அவருடைய வீசாவின் கால அவகாசம் இன்னும் 90 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறையினர் இலங்கையில் இருந்து வீசா மூலம் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை, திருகோணமலை பகுதியில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை பொலிஸ் துறையில் பணியாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ள சிலையில், வீசா மூலம் தமிழகம் வந்த இலங்கையை சேர்ந்த தினேஷ் காந்த் என்பவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் முறையான ஆவணங்களை வைத்துள்ளதை தெரியவந்து்ளளதுடன், வெளியிடங்களில் சுற்றக் கூடாது என்றும் பொலிஸார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.



