யாழில் சட்டத்தரணியின் சதியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் சிறை சென்ற துயரம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 75 வயதுடைய சின்னையா சிறிலோகநாதன் என்பவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பலாலியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில்...
இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் தொடர்பான வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக அவரது உறவினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட முதியவரின் உறவினர் கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினையை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய அன்றே வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.
அரசியல் சூதாட்டம்
ஆனால் தற்போது சட்டத்தரணியாக உள்ள அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்றே அவரை சிறையில் அடைப்பதற்காக அனைத்து தந்திரோபாயங்களையும் மேற்கொண்டுள்ளார்.
குறித்த நபருக்கு ஆதரவாக முன்னிலையாவதாக தெரிவித்த அந்த சட்டத்தரணி, அவர் உள்ளே செல்வதற்கான வேலைகளை மாத்திரம்தான் செய்துள்ளார்.
அவரை கைது செய்த புலனாய்வுத்துறையினரே கூறினார்கள் அவரை விடுதலை செய்யலாம் என்று. ஆனால் அந்த சட்டத்தரணி அவரை உள்ளே அனுப்புவதிலேயே குறியாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கருத்து தெரிவிக்கையில், நேரடியாக சட்டத்தரணி சுமந்திரன் சதி செய்ததாக குற்றச்சாட்டினார்.
