காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா விசனம்
இலங்கை அரசியல் புதியதொரு போராட்டக்களத்தைக் கண்டதும், அப்போராட்டக்களத்தின் நாயகர்களாக மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மாறினார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, “மக்கள் எதிர்கொண்ட வாழ்வியல் நெருக்கடியின் குரலாக போராட்டக்களத்தின் இளைய தலைமுறை மாறியுள்ளது.
அவர்கள் மீது தினிக்கப்பட்ட அரசியல் வன்முறை முழு நாட்டிலும் அதில் ஈடுபட்டவர்களின் சொத்துகளை அழித்து உயிரைப் பறிக்கும் அளவுக்கு எதிர்பாராத திருப்பத்தை உருவாக்கியுள்ளது.
அரசியல் கலாசாரம் மாற்றம்
அத்துடன் காலங்காலமாக இருந்து வந்த இலங்கை அரசியல் கலாசாரம் முதன் முறையாக மக்கள் எழுச்சியின் மீது அச்சங்கொண்டுள்ளது. மேலும் போராட்டக்களத்தின் கர்த்தாக்கள் அரசியல் வாதிகளின் ஒட்டுமொத்த பார்வையும் விழத்தக்க இடத்தில் இருக்கத் தொடங்கியுள்ளார்கள்.
சில அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்பின் மீது ஏற்பட்ட அச்சம் காரணமாக போராட்டக்களத்து இளைஞர்களுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கிடும் அளவுக்கு நிலை மாற்றமடைந்துள்ளது.
இந்நாட்டின் பிரதமர் பதவி விலகினார், அந்த இடைவெளியில் ரணில் ஆட்சிக்கு வந்தமர்ந்தார், ரணிலுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் வலுப்பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய எல்லாக்கட்சித் தலைவர்களும் ரணிலுக்கு எதிராக பகிரங்கமாகவே குரல் எழுப்பினார்கள். ரணில் போராட்டக்களத்தில் நின்ற இளைஞர்களுக்கு ஆதரவாக அப்போது குரல் கொடுத்தார்.
ரணில் ஜனாதிபதியாக நியமனம்
வலுப்பெற்ற போராட்டம் இறுதியில் ஜனாதிபதியை பதவி விலகச் செய்தது. அந்த இடைவெளியில் ரணில் தனது நிறைவேறாமல் இருந்த ஜனாதிபதிக் கனவை நிறைவேற்றிக்கொள்ள போராட்டக்கள இளைஞர்களின் செயற்பாடு களமமைத்துக் கொடுத்துள்ளது. போராட்டக்கள இளைஞர்களின் ரணிலுக்கு எதிரான குரல் ரணிலின் போக்கில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
ரணிலுக்கு எதிராக கடைசியில் மக்களுக்கான போராட்டக்களச் செயற்பாட்டாளர் இந்த அனைத்து அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டுள்ளார்கள்.
மக்களின் பிரச்சினை
எல்லா அரசியல்வாதிகளும் எல்லா பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் மறந்து தமக்குள் ஐக்கியமாக தொடங்கியுள்ளார்கள். ஆனால் மீண்டும் மக்கள் தோற்றுப் போகத் தொடங்கியிருக்கின்றார்கள். ஏனெனில் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது.
மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் சிறையில் அடைபடும் பொழுது அவர்களுக்காகக் குரல் கொடுக்க யாருமில்லாது போக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ரணில் எதிர்ப்பு அரசியல்வாதிகள் ரணிலின் விருந்துபசாரத்தில் கை நனைத்திருப்பார்கள்.
இதுதான் அரசியல் என்பதைப் புரிந்துக்கொள்ள இன்னும் எத்தனை விதமான நிகழ்வுகளை மக்கள் கடந்து போக நேரிடும் எனத் தெரியாது” என தெரிவித்துள்ளார்.