நான் பதவியில் இருக்கும்வரை இதுவே முடிவு! ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு (Photos)
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம், ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல், தான் ஒருபோதும் பிரசித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாகச் சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டுக்குச் சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முப்படைகளினதும் தலைவரான ஜனாதிபதி, அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் நேற்றைய தினம் (01.04.2023) முப்படையினருக்கான சிறப்புரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகள்
கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீதிகளில் வன்முறைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சரியானதைச் செய்ய அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக என்பதை அறியவே, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை உதாரணமாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், புதிய சிந்தனைகளுடன் புதிய பயணத்தைத் தொடர்ந்தால் 25 வருடங்களுக்குள் பெரும் அபிவிருத்தியை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போன்றே நாட்டின் பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் துரித நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு – 2023
அதற்காக முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாகத் தேவையென வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டம், ஒழுங்கை பாதுகாக்கக் கடந்த காலங்களில் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பாராட்டியுள்ளார்.
மேலும், முப்படையினர் இந்தப் பணியைச் செய்யத் தவறியிருந்தால் இன்று நாடு வன்முறை நிறைந்த பூமியுமாக இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கிடையில் இடையிலான போட்டித் தன்மை, இந்து சமுத்திர வலயத்தைப் பெரிதும் பாதிக்கும் எனவும், இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அந்தப் பாதிப்பிலிருந்து இலங்கையை மீட்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடத்து முடிந்த போராட்டங்களைப் போல் அல்லாது எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்தப் போராட்டங்கள் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியதாக அமையும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தொழில்நுட்பத் தெரிவுடன் கூடிய முப்படையினரை உருவாக்குவதற்காகவே “பாதுகாப்பு – 2023" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
படையினரின் ஒத்துழைப்பு அவசியம்
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சட்டம் - ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காகப் படையினரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், தேசியப் பாதுகாப்பு
தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான
சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன,
பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி வைஸ் எயார் மார்ஷல்
சுதர்ஷன பத்திரன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேரா, பொலிஸ்மா
அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் 1,200
இற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



