பெற்றோர்களுக்கு குறையும் நிதி அழுத்தம்! அரசாங்கத்தின் புதிய திட்டம்
பிள்ளைகளின் கல்விக்காகப் பெற்றோர்கள் எதிர்நோக்கும் பாரிய நிதிச்சுமையைக் குறைப்பதில் தற்போதைய அரசு உறுதியாக இருக்கின்றது என்று பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
அரசின் திட்டங்கள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெற்றோர்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பது எமது அரசின் பிரதான கொள்கையாகும். இது எமது பரந்த கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்தச் சீர்திருத்தங்கள் பொதுக் கல்வியைத் தாண்டி, விசேட கல்வியை வலுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றன.
அரசாங்கத்தின் முடிவு
மாற்றுத்திறனாளிகள் முழுமையாகச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும். நாங்கள் எவரையும் பின்னால் விட்டுச் செல்லவில்லை.
உரிமை மீறப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் பயணத்தையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்குத் தீவிரமாகப் பங்களிப்பவர்களாக மாற்றப்படுவார்கள்.

கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளுக்காகத் தேசிய வரவு - செலவுத் திட்டத்தில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசுக்குள் முடிவுகள் கூட்டாகவே எடுக்கப்படுகின்றன. நாங்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதில்லை. ஒரு கூட்டு அரசாகவே செயற்படுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.