கதிர்காம பாதயாத்திரையில் பயணித்து வரும் சுப்பிரமணியன் நாயை துன்புறுத்திய நபர்
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுப்பிரமணியன் நாய்
21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினரோடு பயணித்து வரும் சுப்பிரமணியன் எனும் பெயருடைய நாயையே அவர் இவ்வாறு உதைத்து துன்புறுத்தியுள்ளார்.

மேலும் இன்று கல்முனை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரினால் தாக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும் என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சுமார் 450 கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்த குறித்த சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வைரலானதுடன் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கண்டங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் கைது
அத்துடன் நாயை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறித்த நாய் தன்னால் துன்புறுத்தலுக்கு உள்ளானமை குறித்து மன்னிப்பு கோரி உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.