ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக இவ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மூதூர் -ஆலிம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போது 18 வயதுடைய நபர் ஒருவரிடமிருந்து 240 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் மூதூர் நொக்ஸ் வீதியில் வைத்து ஐஸ் விற்பனை செய்ய தயாராக இருந்த மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.