மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் நியமிப்பு!
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை நியமித்துள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (08) கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின்போது வழங்கி வைத்துள்ளார்.
இதன்படி மூதூர் தொகுதியின் அமைப்பாளராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை தொகுதிக்கான அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரகரவும் சேருவில தொகுதிக்கான அமைப்பாளராக மகேஷ் சத்துரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.கே.ஏ.டிஸ். குணவர்தனவின் புதல்வர் நளின் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.