பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்
இலங்ரைக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த சந்திப்பானது, நேற்று(03.05.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, வடகிழக்கில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிநேசனின் கருத்து
இது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கருத்து தெரிவிக்கையில்,
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் ஆகிய இருவரையும் நாங்கள் சந்தித்துக் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
குறிப்பாக, எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் எங்களுடைய முன்னாள் மேயர், எமது பிரதி மேயர் மற்றும் வடக்கு, கிழக்கு இளைஞர் அணி தலைவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் பேசியிருந்தோம்.
அதாவது, இந்த கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் எப்படியான பிரச்சினைகள் இருக்கின்றன, வடக்குக் கிழக்கில் காணப்படுகின்ற பிரச்சினைகள் என்ன என்கின்ற விடயங்களைப் பற்றி நாங்கள் பேசியிருந்தோம்.

அதில் அரசியல் சம்பந்தமான தீர்வு பற்றிய விடயங்கள், அந்த பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எனப் பல விடயங்களை பற்றி நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.
அவர்களும் ஆர்வமாக இந்த விடயங்களைக் கேட்டிருந்ததோடு தங்கள் பதில்களையும் தெரிவித்திருந்தனர்.

மேலும், கிழக்கு மாகாண தேர்தல் பற்றியும், 13வது திருத்தத்தைப் பற்றியும் தான் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்கள்.
இருந்தாலும் நாங்கள் உரையாடிய போது அவர்கள் மிகவும் ஆர்வமாகவும் திருப்தியாகவும் இந்த பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளையும், செய்ய வேண்டிய அபிவிருத்தி பற்றிய விடயங்களையும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும், கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகள் பற்றியும் கூறியிருந்தார்கள் என்றார்.
இந்த சந்திப்பில், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் மார்டின் இசபெல்லாவுடன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.