பாரசீக வளைகுடாப் போருக்கு ஈரானின் அணுசக்தி செயற்பாடு மட்டும் தான் காரணமா..!
பாரசீக வளைகுடாவில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வான்வெளி தாக்குதல்களுக்கு ஈரானின் அணுசக்தி திட்டம் தான் முக்கிய காரணம் அல்ல. இஸ்ரேலுக்கு மட்டுமே ஈரானின் அணுத்திட்டங்கள் அச்சுறுத்தலாக உள்ளது.ஆனால் அமெரிக்காவுக்கு உலகம் தழுவிய அதன் ஆதிக்கத்திற்கு பாரசீக வளைகுடாவை தனக்குச் சார்பாக மாற்ற வேண்டும்.
அதற்கு ஈரானின் ஆட்சியாளர் தடையாக உள்ளனர். அத்தோடு ஈரானின் சீனாவுடனான அரசியல், பொருளியல், தொழிநுட்ப ஒத்துழைப்பு வளர்ச்சியும் அமெரிக்காவின் தேசிய நலனுக்கு தடையாக உள்ளது.
அதேசமயம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சவுதியரேபியாவின் பிராந்திய அரசியல் போட்டி, மற்றும் மதக்கோட்பாட்டு முரண்பாடுகள் என இவை அனைத்தும் சேர்ந்துதான் இன்றைய வளைகுடாப் போருக்கான காரணங்களாக இருக்கின்றன. நிலைமைகள் இவ்வாறு இருக்கின்றபோது ஈரானின் அணுசக்தி செயற்பாடு மட்டுமே காரணம் என பேசப்படுவதும், ஊடக கருத்துவாக்கங்களின் பின்னணி பற்றிப் பார்ப்போம்.
அணுசக்தி திட்டம்
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகள் நீண்ட காலமாக சந்தேகம் கொண்டுள்ளன. குறிப்பாக Joint Comprehensive Plan of Action (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகியதன் பிற்பாடுதான் வளைகுடாவில் பதற்றம் அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது.
இதனை தொடர்ந்து தான் ஈரான் மீதான பொருளாதார தடைகள், இராணுவ எச்சரிக்கைகள் போன்றவை உருவாகின என்பதும் உண்மைதான். ஆயினும் இவற்றை ஊக்குவித்த காரணிகள் பல உள்ளன. அவற்றில் பிராந்திய அதிகாரப் போட்டியும் ஒன்றாகும். மத்தியகிழக்கில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக பிராந்தியபோட்டி உள்ளது.

இந்த போட்டி நேரடியாகப் போராக அல்லாமல் ஏமன், லெபனான், சிரியா,ஈராக் போன்ற நாடுகளில் பதிலாள் யுத்தத்தை(proxy war)ஹௌதி,கிஸ்புல்லா போன்ற அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கங்கள் மூலமாக நடத்தப்படுகிறது. இங்கு ஈரானுடைய கையோங்கியிருக்கிறது.
இதனை சவுதியரேபியாவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சவுதி அரேபியா அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியில் நெருங்கிய நட்பு நாடாக மாறியதோடு, ஈரானுக்கு எதிராக பின்கதவால் செயற்படுகிறது.
ஜூன் 1967ல் இஸ்ரேலுக்கு எதிரான ஆறு நாள் யுத்தத்தில் ஒருங்கிணைந்து நின்ற அராபிய நாடுகள் இன்று பலஸ்தீனத்தை கைவிட்டு இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுறவில் ஈடுபட்டிருப்பது இஸ்லாமிய மதச்சட்டப்படி குற்றமாகவே கருதப்படுகின்ற போதிலும் பெரும்பாலான அரேபிய நாடுகள் அமெரிக்க சார்பாக இருப்பதனையும் இங்கே கருத்துக் கொள்ள வேண்டும்.
இதற்குக் காரணம் இந்த அராபிய நாடுகள் சன்னி முஸ்லிம்களாகவும், ஈரானியர்கள் ஷியா முஸ்லிம்களாகவும் இருப்பதனால் அவர்களுக்கு இடையிலான மதக் கோட்பாடு முரண்பாடுகளும், அரசியல் காழ்ப்புணர்வுகளும் மத்திய கிழக்கில் அரசியல் முரண்பாடுகளாக பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன.
ஈரான் மீது தாக்குதல்
இதுவே பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் அரபு உலகத்தினரிடமிருந்து ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான காரணமாகவும் அமைந்துள்ளது. அத்தோடு உலகளாவிய ஆளுகைப் போட்டியில் மத்திய கிழக்கு முக்கிய பங்கையும், பாத்திரத்தையும் வகிக்கிறது.
அமெரிக்காவின் தேசிய நலன் என்பது உலகம் தழுவிய மூலவளங்களை சுரண்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்வதுதான். அந்த அடிப்படையில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களை சுரண்டுவதற்கு அந்தப் பிராந்தியத்தில் தனது இராணுவ மற்றும் அரசியல் அதிகார ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்.

அரேபிய தீபகற்பத்தில் யெமன் தவிர்ந்த ஏனைய நாடுகள் அமெரிக்க சார்பு நாடுகளாக இன்று மாற்றப்பட்டு விட்டது. வளைகுடாவின் கடலின் கிழக்கு புறமாக உள்ள ஈரான் சீன -ரஷ்யா சார்பு நாடாகவும், சீனாவுடன் ஈரான் பெரிய அளவு அரசியல் பொருளியல் உறவுகளை பேணுவதனால் ஈரானை தமது வழிக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் ஆட்சியாளரை மாற்ற வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உண்டு.
அத்தோடு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை காரணமாக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஈரான் ராணுவ தளபாட உற்பத்தியில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் இஸ்ரேயிலும், அமெரிக்காவும் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அதனாலேதான் ஈரானைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தற்போதைய பாரசீக வளைகுடா தாக்குதல்கள் அமைந்துள்ளன.
இஸ்ரேல் ஈரானின் அணுத் திட்டத்தை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனால் இரகசிய தாக்குதல்கள், சைபர் தாக்குதல்கள் போன்றவை ஈரான் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் ஈரானின் அணுசக்தி செயல்திட்ட வரலாற்றினை நோக்குவது அவசியமானது.
ஈரான் அணுசக்தி செயற்திட்ட (Iran Nuclear Program) என்பது உலக அரசியல், பாதுகாப்பு மற்றும் சக்தி வளத்துறைகளில் முக்கியமான விவாதப் பொருளாக இன்று இருந்து வருகிறது. இது பல தசாப்தங்களுக்கு நீளும் ஒரு சிக்கலான தீர்க்கப்பட முடியாத பிணக்கு வரலாற்றைக் கொண்டது. ஈரானின் அணுசக்தி திட்டம் முதன்முதலில் அமைதியான மக்களின் பொதுப் பயன்பாடுகளுக்காகத் தொடங்கப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் இது அணு ஆயுதத் திட்டமாக மாறக்கூடும் என்ற சந்தேகங்கள் மேற்குலகத்தவரிடைய உருவாகி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது விட்டது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மன்னர் முகமது ரெசா ஷா பஹ்லவி(Mohammad Reza Shah Pahlavi) ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.
மின்சார உற்பத்தி
1957ல் அமெரிக்காவுடன் “Atoms for Peace”(அமைதிக்கான அணுக்கள்) என்ற ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் அணு ஆராய்ச்சி தொடங்கியது. 1967ல் தெஹ்ரான் அணு ஆராய்ச்சி மையம் (Tehran Nuclear Research Center) நிறுவப்பட்டது. இதில் அமெரிக்கா வழங்கிய அணு உலை பயன்படுத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் ஈரான் அணுசக்தியை மின்சார உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டது. அவ்வாறுதான் நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டது. 1979ல் நடந்த ஈரானிய புரட்சி (Iranian Revolution) மூலம் ஷா ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய இஸ்லாமிய அரசு ஆரம்பத்தில் அணுசக்தி திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தியது.

ஆனால் ஈரான்-ஈராக் யுத்த காலத்தில் சக்தி மற்றும் பாதுகாப்பு தேவைகள் அதிகரித்ததால் அணுசக்தி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
1990களில் ஈரான் ரஷ்யாவின் உதவியுடன் அணு திட்டங்களை மீண்டும் முன்னேற்றியது. 2002ல், ஈரானின் இரகசிய அணு நிலையங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உலகளாவிய கவலைக்கு வழிவகுத்தது.
International Atomic Energy Agency (IAEA) ஈரானின் அணு செயல்பாடுகளை விசாரணை செய்யத் தொடங்கியது. இதனால் ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகள் ஈரானுக்கு பொருளாதார தடைகள் விதித்தன. இந்நிலையில்தான் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின், 2015ல் Joint Comprehensive Plan of Action (JCPOA) என்ற அணு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த அணுசக்தி ஒப்பந்தம் என்பது ஒரு முக்கிய சர்வதேச அரசியல் ஒப்பந்தமாகும். இந்த JCPOA என்பது ஈரான் மற்றும் உலகின் முக்கிய நாடுகளான (P5+1) அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகியவற்றுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தம்.
அதன் மூலம் ஈரானை அணுவாயுத உற்பத்தியை நெருங்கவிடாது கட்டுப்படுத்துவது, அதற்குப் பதிலாக ஈரான்மீதான பொருளாதார தடைகளை (sanctions) நீக்குவது என்ற முக்கிய நோக்கங்களை கொண்டதாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தில் அடங்கிய முக்கிய அம்சங்களாவன 1. அணு திட்ட கட்டுப்பாடு என்பது யூரேனியம் செறிவு (uranium enrichment) 3.67% வரை மட்டுமே.
அணு ஆயுதத்திற்கு தேவையான அளவு (~90%) தயாரிக்க முடியாதபடி கட்டுப்பாடுத்துவது. 2. அணு செறிவூட்டல் வசதிகள் குறைப்பு அதாவது சென்ட்ரிப்யூஜ்கள் (centrifuges) எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
சில அணு நிலையங்கள் (Fordow, Natanz போன்றவை) அமைதிப் பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டது. 3. சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகிய International Atomic Energy Agency (IAEA) ஈரானின் அணு நிலையங்களை கண்காணிக்கும் அதிகாரம் பெற்றது. 4. ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த பல பொருளார சர்வதேச தடைகள் நீக்கப்பட்டது.
இதனால் ஈரானுக்கு பொருளாதார சலுகைகள் கிடைத்ததமையால் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய நலங்களுக்காகவே ஈரானும் தனது அணு செயல்பாடுகளை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டன.
அமெரிக்க அரசு
2018 டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு JCPOA ஒப்பந்தத்திலிருந்து விலகியது. ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதனால் பாரசீகவளைகுடாப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
ஈரான் தனது அணு செயல்பாடுகளை மீண்டும் அதிகரித்தது. உலகிற்கு சக்தி வளத்தை வழங்கும் மையப்பகுதி பாதுகாப்பாற்றுருத்தல் என்பது உலக நாடுகளை பாதிக்கும். ஈரான் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கத்திலிருந்து தொடங்கி, உலகளாவிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

இது பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார சமநிலைகளைப் பாதிக்கும் முக்கிய விஷயமாக தொடர்கிறது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்-2015 (Iran Nuclear Deal ) ஏன் முக்கியம்? எனப் பார்ப்போமானால் தற்காலிகமாக அணு ஆயுத பரவலை (nuclear proliferation) தடுக்க உதவியது.
மத்திய கிழக்கு பகுதியில் போர் அபாயத்தை குறைத்தது. சமாதானமாக பேச்சு வார்த்தைகளினால் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி உண்டு என்ற நம்பிக்கையை தோற்றுவித்தது.
ஆயினும் இந்த ஒப்பந்தம் தற்காலிகம், மற்றும் சில கட்டுப்பாடுகள் காலவரையுடன் இருந்தமை, ஈரானின் ஏவுகணை (missile) திட்டம் இதில் சேர்க்கப்படவில்லை.என்பதனால் அதிருப்தியடைந்த சில நாடுகள் “இது முழுமையான தீர்வு அல்ல” என்று நம்பிக்கையீனங்களை கொண்டிருந்தன என்பதும் யதார்த்தமே.
இத்தகைய நிலைமையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2018-ல் ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அதற்குரிய காரணமாக ஒப்பந்தம் போதுமான கட்டுப்பாடுகளை வழங்கவில்லை என்று கூறப்பட்டது. இதன் பிற்பாடு ஈரான் மீண்டும் அணு செயல்பாடுகளை அதிகரித்தது.
ஈரானின் அணுசக்தி பிரச்சினை என்பது தீர்ந்துவிடும் பிரச்சினை அல்ல. ஆனால் அதனை நிர்வகிக்க வேண்டிய பிரச்சினை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ஈரானால் உண்மையில் அணு குண்டை உருவாக்கிட முடியுமா? என்று கேட்டால் ஆம் என்பதை பதிலாகும். ஈரான் அணு குண்டு ஒன்றை உருவாக்கம் திறன் கொண்ட நாடாக வளர்ந்துள்ளது. ஆனால் அது உடனடியாக குண்டு ஒன்றை தயாரிக்கும் என்று சொல்ல முடியாது.
இதனை தெளிவாக புரிய சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். ஈரான் அணுத்தொழில்நுட்ப திறன் தகுதிநிலையை எட்டி உள்ளது. அதற்காகவே ஈரான் பல ஆண்டுகளாக அணு தொழில்நுட்பத்திற்காக பெரும் முதலீடு செய்துள்ளது. அதன் பயனாக யூரேனியம் செரிவூட்டும் (uranium enrichment) திறனை உயர்ந்துள்ளது.
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு
இந்த அடிப்படையில் சில கணிப்புக்கள், மற்றும் அறிக்கைகளின்படி யூரேனியத்தை 60% வரை செறிவ்வூட்டியுள்ளது. அணு ஆயுத தயாரிப்புக்கு 90% செரிவூட்டப்பட்ட யூரேனியம் தேவை. ஆகவே ஈரான் அணுவாயுத வாசல் நிலை அண்மித்துள்ளது என்பதனால் அணு ஆயுதத்திற்கு நெருக்கமான நாடு என்றுதான் சொல்லவேண்டும்.
இருப்பினும் ஒரு அணுகுண்டை உருவாக்குவது எளிதல்ல. அணுகுண்டை உருவாக்க 3 முக்கிய கட்டங்களைக் கடக்க வேண்டி உள்ளது. அதில் (1) யூரேனியத்தை உயர் செறிவூட்டும் திறனை ஈரான் பெற்றுள்ளது.

(2) ஆனால் குண்டு வடிவமைப்பு தொழில்நுட்பம், பாதுகாப்பான பரிசோதனை என்பது மிகக் கடினமானது. (3) ஈரானிடம் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் முழுமையான அணு ஆயுத உருவாக்க தயார் நிலை அடைவதற்கு இன்னும் காலம் தேவை என கருதப்படுகிறது.
எவ்வளவு விரைவாக அணுகுண்டை ஈரானால் தயாரிக்க முடியும் என்ற கேள்விக்கு நிபுணர்கள் ஈரான் யூரேனியம் தயாரிப்புக்கு சில வாரங்கள் ஒரு மாத காலம் எடுக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
அப்படியானால் ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னரும் ஏன் இன்னும் குண்டு உருவாக்கவில்லை என்பதற்கு ஈரான் அணுவாய்த "திறன்(capability) பெற்றுள்ளது, ஆனால் உருவாக்கம்(build) செய்யவில்லை” என்கின்றனர். அதாவது விரைவில் ஈரானால் ஒரு அணுகுண்டை உருவாக்க முடியும்.ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உருவாக்கவில்லை.
அத்தோடு ஈரானின் அணு ஆயுத உற்பத்தி என்பது தொழில்நுட்ப பிரச்சினை அல்ல இது ஒரு உள்ளக, வெளியக அரசியல் முடிவு (political decision) என்பவற்றில் தங்கியுள்ளது என்ற உண்மை வெளிப்படுகிறது. ஈரான் அணு குண்டு ஒன்றை உருவாக்கினால் அது உலகளாவிய அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
முக்கியமாக மத்திய கிழக்கு பகுதியில் அணு ஆயுதப் போட்டி(Nuclear Arms Race) ஒன்று உருவாகும். ஈரானைத் தொடர்ந்து சவுதி அரேபியா, துருக்கி, ஆகிய நாடுகள் தாமும் அணுவாயுதம் உருவாக்கத்திற்கு முயற்சிப்பர். இதனால் மத்தியகிழக்குப் பிராந்தியம் முழுவதும் அணு ஆயுத போட்டி தொடங்கும்.
இதனால் எண்ணெய் உற்பத்தி, வழங்கல் என்பவை பாதிப்படையும். இதன் தொடர் விளைவாக உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். இங்கே“ஒரு நாடு அணு குண்டு பெறுவது மட்டும் அல்ல, அது உலகத்தின் பாதுகாப்புச் சமநிலையை மாற்றும்” என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 03 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பாரசீக வளைகுடாப் போருக்கு ஈரானின் அணுசக்தி செயற்பாடு மட்டும் தான் காரணமா..! 57 நிமிடங்கள் முன்
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam