கோவிட் தொற்று பரவல் தொடர்பில் ஓட்டமாவடியில் விசேட கூட்டம்
ஓட்டமாவடி பிரதேசத்தில் திடீரென கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரதேசத்தில் வைரஸ் தாக்கம் அதிகரிக்காத வகையில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரிக்காத வகையில் அனைத்து தரப்பினரும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் சட்டத்தினை மதித்து நடந்தாலே கோவிட் தொற்றில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வெளி இடங்களில் இருந்து எமது பிரதேசத்திற்கு எவரும் வருகை தந்தால் சுகாதார திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி பிரதேசத்தினை காப்பாற்ற பிரதேசத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.
இதற்காக எமது பிரதேசத்தில் அரம்பிக்கப்பட்ட கிராம மட்ட குழுவினரை மீண்டும் இணைத்து அதன் மூலம் வேலைத் திட்டங்களை மேற்கொள்ள கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒத்தழைக்க வேண்டும்.
சுகாதார பிரிவினர் கிராமங்களுக்கு ஊடாக பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது அந்தந்த கிராம மட்ட குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் தேவையற்ற விதமாக வீதிகளை திரிய வேண்டாம் என்றும் பெரும்பாலானவர்கள் கூடி நின்று வீதியோரங்களில் கதைக்க வேண்டாம் எனவும் இவ்வாறு இடம்பெற்றால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இக் கூட்டத்தில் ஓட்டமாவடி சகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.