யாழின் சில வீதிகள் இராணுவத்தினரால் திடீரென முடக்கம்
யாழ். கொடிகாமம் - பருத்தித்துறை பிரதான வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் கடமையில் இருக்கும் இராணுவத்தினர் இவ்வாறு வீதியூடான போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.
இதன்காரணமாக, குறித்த வீதியினால் பயணம் செய்யும் பலரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவு கடந்த 5ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இரு கிராமங்களும் அமைந்துள்ள பகுதியூடாக செல்லும் கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி தற்போது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதனால் தென்மராட்சி, வடமராட்சி பிரதேசங்களுக்கு சென்று வருவோர் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து வேறு வீதிகளூடாக பயணிக்கின்றனர்.
இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவிக்கையில், பிரதான வீதிகளினூடான போக்குவரத்தினை தடை செய்யவில்லை எனவும், குறித்த இரு கிராமங்களுக்குள் உட்செல்ல, வெளியேற மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.