கொடுப்பதில் குறை காண்பதையே சில அரசியல்வாதிகள் தொழிலாக கொண்டுள்ளனர் : எம்.ரமேஸ்வரன்
அரசாங்கம் இன்று சுயதொழில் மூலம் வருமானத்தினை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு உதவிகள் செய்துவருகிறது. அதற்காகக் கடந்த காலங்களில் பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன.
ஆனால் கொடுப்பதில் குறை காண்பதையே ஒரு சில அரசியல் வாதிகள் தொழிலாகக் கொண்டுள்ளனர் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாடு கொடுத்தால் அதனை மாட்டுத் தொழில் தானே என்கின்றனர், ஆடு கொடுத்தால் அது ஆட்டுத்தொழில் தானே, என்கின்றனர். கோழி கொடுத்தால் கோழித்தொழில் என அதனை உதாசீனம் செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொகவந்தலா, மஸ்கெலியா, அக்கரபத்தனை உள்ளிட்ட பிரதேசங்களில் பால் உற்பத்தியில் ஈடுபடும் பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக புற்தரிக்கும் இயந்திரம், பால் கரக்கும் இயந்திரம், குளிரூட்டிகள் சீலர், தள்ளுவண்டி, மண்வெட்டி, உள்ளிட்ட சுமார் 20 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மத்திய மாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலா தோட்ட விளையாட்டு கழக மண்டபத்தில் நேற்று(17) மாலை நடைபெற்றது.
அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
''மாடு வளர்ப்பு என்பது கௌரவம் குறைந்த தொழில் அல்ல. இன்று மாடு வளர்ப்பின் மூலம் ஒரு சிலர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். அவ்வாறானவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் இவ்வாறான உதவிகளைச் செய்து வருகிறது. அதனை உரிய முறையில் பயன்படுத்தி வருமானத்தினை பெருக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் அரசாங்கம் கொடுக்கும் உதவிகளைப் பெற்றாலும் கூட அதனை உரிய முறையில் பயன்படுத்துவதில்லை. ஏனோ தானோ என்று பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் வருமானத்தினை பெருக்கிக் கொள்வதுமில்லை.
இன்று நல்ல வசதி படைத்தவர்கள் கூட இந்த மாடு வளர்ப்பு தொழிலினை செய்கிறார்கள். ஆரம்பக் காலங்களில் தோட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு இருந்தது. ஆனால் இன்று அந்த நிலையில்லை. ஒரு சிலர் வீடுகளில் இரண்டு மூன்று மாடுகளும் காணப்பட்டன.
அரசாங்கம் இப்படி மாடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்து பால்மா கொள்வனவினை குறைக்க வேண்டும் என்று எண்ணியே இவ்வாறான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆகவே இதனை உரிய முறையில் பயன்படுத்தி வருமானத்தினை பெருக்கிக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் இன்று ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகப் பல லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக்கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக சுய தொழில் ஊக்குவிப்பதற்காக 40 சதவீதத்தினை ஒதுக்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் அதனைப் பெற்றுக்கொண்டு ஒரு சிலர் குறை கூறுகின்றனர். நான் மத்திய மாகாணத்தில் அமைச்சராக இருந்த போது அவுஸ்திரேலியாவிலிருந்து 4000 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டது. அப்போது அதற்கு பொறுப்பான அமைச்சருடன் பேசி மத்திய மாகாணத்திற்கு மாத்திரம் 2900 பசுமாடுகளைப் பெற்றுக்கொடுத்தேன்'' இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிகழ்வுவில் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி,மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் குமுதினி ராஜநாயக்க, கால் நடை வைத்தியர்களான பி.எம் விக்கிரமநாயக்க, ஜே,தவராஜா, சுரேஸ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri