நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஆறுகள் மற்றும் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் இரு வான்கதவுகளும், மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகளும் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இன்று காலை 50 மில்லிமீற்றர் இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக டெவோன் மற்றும் சென்கிளேயர் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளன
அத்துடன் நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப் பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதனால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றதாக கூறப்படுகிறது.
எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவசர கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் நுவரெலியா ஹட்டன் கொழும்பு ஹட்டன் ஆகிய பிரதான பாதைகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகனசாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹட்டன் அண்டிய பல இடங்களில் மழையுடன் கடும் காற்று வீசுவதனால் ஹட்டன் உள்ளிட்ட சில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் இன்று (11) காலை வரை மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது