ஹரிணி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை : தமிழரசுக் கட்சி ஆதரிக்காது!
கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு வழங்கபோவதில்லை
கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கட்சிகள், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன.
அந்தவகையில், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு, ஆட்சி- எதிர்க்கட்சி அரசியல் மோதல்களிலிருந்து விலகி, தமது மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையாகவே கருதப்படுகின்றது.

இதற்கிடையில், கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவை கடந்த வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, கல்வி, மாகாண நிர்வாகம், வடக்கு, கிழக்கு தொடர்பான அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள் என்று சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு, இரு தரப்புகளுக்கிடையிலான அரசியல் உரையாடலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது.
ஆக மொத்தத்தில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழரசுக் கட்சி நேரடி ஆதரவு வழங்காத நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், வாக்கெடுப்பு நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.