சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை விருந்து நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட டெக்னோ இசை நிகழ்ச்சி அதிகாலை வேளையில் நிறைவடைந்த தருணத்திலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களும் உயிரிழந்த பெண்ணும் 20 முதல் 27 வயதிற்குட்பட்ட சுவிட்சர்லாந்து வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் நகரின் பல பகுதிகளை முடக்கி தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பிலான ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் ஏதேனும் இருப்பின் அதனை வழங்கி உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாட்டு உரிமங்கள் பரவலாக காணப்படுகின்ற போதிலும், இவ்வாறான கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.