அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - மூவர் பரிதாப பலி
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சியாட்டில் நகரின் 'ஸ்பேஸ் நீடில்' பகுதியின் கீழ் நடைபெற்ற 'பைட் ஆஃப் சியாட்டில்' உணவுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
இரண்டு சந்தேக நபர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கி மோதலே இதற்குக் காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பொலிசிடம் சரணடைந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

தப்பியோடிய நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் 19 மற்றும் 44 வயதுடைய இரு ஆண்களும், 56 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 2 வயது குழந்தை உட்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரமான வன்முறை
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சியாட்டில் நகரின் மேயர் கேட்டி வில்சன் (Katie Wilson),

"இது ஒரு பயங்கரமான வன்முறைச் சம்பவம். நமது நகரிலும் நாட்டிலும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கிறது," என தெரிவித்துள்ளார்.
உணவுத் திருவிழாவில் கடை அமைத்திருந்த ஒருவர் நேரலை செய்து கொண்டிருந்த போது இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால், மக்கள் அலறியடித்து ஓடும் பயங்கரக் காட்சிகள் கெமராவில் பதிவாகியுள்ளன.