பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர்
அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் நேற்று (10) இரவு பெண் மருத்துவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (11) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைது
இதனிடையே, அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் நேற்று இரவு பெண் மருத்துவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி மருத்துவர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண் மருத்துவர், நேற்று, தனது கடமைகளை முடித்துவிட்டு, மருத்துவ அதிகாரிகளுக்கான விடுதிக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், மாலை 6.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையான காலத்துக்குள், அடையாளம் தெரியாத ஒருவர் வளாகத்திற்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, மருத்துவரை தகாதமுறைக்கு உட்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |