முன்னாள் ஜனாதிபதி இழப்பீட்டை செலுத்தியதாக அறிவித்த சட்டத்தரணி
ரோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட 1 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளதாக அவரது சட்டத்தரணி உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இன்று காலை குறித்த இழப்பீடு வழங்கப்படவில்லை என முன்வைக்கப்பட்ட விடயத்தை முன்னர் பரிசீலித்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக ஏப்ரல் 29 ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தாம், ஏன் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இழப்பீட்டை செலுத்தியதாக அறிவிப்பு
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் தொடர்புடைய கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக, நீதிமன்றத்திற்கு அறிவித்தார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த தகவலை முறையான பிரேரணை மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதியின், சட்டத்தரணிக்கு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |