நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு: NPPயின் தலைமைத்துவ குழுவிலிருந்து வந்த எதிர்ப்பு...
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றி NPPயின் தலைமைத்துவ குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர் இந்தப் போராட்டம் கட்சிகளுக்கு இடையிலான போராட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல. இந்தப் போராட்டத்தின் அர்த்தம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்
கட்சியினால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. யாரோ தனிநபர்கள் அல்லது ஏதேனும் தரப்பினர் மத்தியில் அப்படி ஒரு யோசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
இவ்விடயம் தொடர்பில் என்னை அமைதியாக இருக்குமாறு கூறியபோது, நான் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் தலைமைக் குழு கூட்டத்திலும் நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன்.
நான் இதற்கு எதிராக செயற்படுவேன் என்று தெளிவுபடுத்தினேன். நான் 45 ஆண்டுகளாக சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளேன். அதற்கு மேலாக சுமார் 50 ஆண்டுகள் இடதுசாரி இயக்கத்தில் செயற்பட்டுள்ளேன்.

நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கமாகும். எனது அரசியலிலும் நான் அதையே பின்பற்றி வந்துள்ளேன்.
எனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதிக்கும் வழங்கியுள்ளேன். 1970களில் பண்டாரநாயக்க அதன் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் நிஹால் ஜயவிக்ரம போன்றவர்களுக்கு எதிராக நாம் போராடியது நினைவிருக்கிறது.
நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழ்வதற்கு நீதிமன்ற சுதந்திரம் அவசியம் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் போராடினோம்.
நீதிமன்ற சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுவோம். நிறைவேற்று அதிகாரம் தனக்கு வேண்டியதைச் செய்ய முடியும்.
அத்தகைய சூழ்நிலை நாட்டில் அராஜகத்தையே ஏற்படுத்தும். எனவே, நாட்டில் மிகவும் முக்கியமான விடயம் நீதிமன்ற சுதந்திரமாகும். அது வீழ்ச்சியடைந்தால், நீதிமன்ற சுதந்திரம் என்ற ஒட்டுமொத்தக் கோட்பாடும் முற்றாகச் சரிந்துவிடும்.
அதன் பின்னர் நாம் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு சர்வாதிகார சமூகம் உருவாவதற்கான சூழலையே விட்டுச் செல்வோம் என குறிப்பிட்டார்.