ISIS பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பலி: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் (ISIL/ISIS)-இன் உலகளாவிய இரண்டாம் கட்டத் தலைவராகக் கருதப்படும் அபு-பிலால் அல்-மினுகி, அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடி இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
உலகின் மிகத் தீவிரமான பயங்கரவாதியை ஒழிப்பதற்காக அமெரிக்காவின் துணிச்சலானப் படைகளும், நைஜீரியப் படைகளும் இணைந்து மிகவும் சிக்கலான, நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்த கூட்டு இராணுவ நடவடிக்கையை எவ்விதத் தவறும் இன்றி மிகக் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
உலகளாவிய பயங்கரவாதி
ஆபிரிக்காவில் பதுங்கியிருந்தால் தப்பித்துவிடலாம் என அல்-மினுகி நினைத்ததாகவும், ஆனால் தங்களின் உளவுத்துறை மூலங்கள் மூலம் அவனது நடமாட்டத்தைக் கண்காணித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றிகரமான கூட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கிய நைஜீரிய அரசுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே அமெரிக்க வெளியுறவுத் துறையால் "உலகளாவிய பயங்கரவாதி" என்று அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் அல்-மினுகி கொண்டுவரப்பட்டார்.
ஆப்பிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய மாகாணங்களுக்கான பொது இயக்குநரகத்தின் மூத்த தலைவராகவும், உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வழங்கும் முக்கியப் புள்ளியாகவும் செயல்பட்டு வந்தார்.
தமிழக அரசியலில் பரபரப்பு! தவெக விற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை
வான்வழித் தாக்குதல்
இவனது வீழ்ச்சி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சர்வதேசச் செயல்பாடுகளைப் பெருமளவில் முடக்கும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாதக் குழுக்கள் நடத்தி வரும் தாக்குதல்களைத் தடுக்க நைஜீரியா போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ட்ரம்ப் இதற்கு முன் குற்றம் சாட்டியிருந்த பின்னணியில், கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று அமெரிக்கா அங்கு வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தது.
அதைத் தொடர்ந்து நைஜீரியப் படைகளுக்குப் பயிற்சி மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்வதற்காக நூற்றுக்கணக்கான அமெரிக்கப் வீரர்கள் நைஜீரியாவில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மிகப் பெரிய கூட்டு இராணுவ வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.