12 லட்சம் ரூபாவிற்கு கார் எங்கே: சஜித் அரசாங்கத்திடம் கேள்வி
தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாவிற்கு 'விட்ஸ்' ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்று வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வரியை விதித்து நுகர்வோர் உரிமைகளை முற்றாக அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போது விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்தவொரு அக்கறையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 'வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதாக மக்களுக்கு உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மின் கட்டணத்தை 33 வீதத்தினால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குதல் மற்றும் இளைஞர் சமுதாயத்திற்கு சலுகை விலையில் வாகனங்களை வழங்குதல் போன்ற பிரதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாக சஜித் பிரேமதாச மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.