தமிழக அரசியலில் பரபரப்பு! தவெக விற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தற்போது வெளிப்படையான அணிப்பிரிவாக மாறியுள்ளன.
தவெக அரசுக்கு ஆதரவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலேயே கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல், தவெக அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில், எஸ்பி வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட V. K. சசிகலா மற்றும் T. T. V. தினகரன் ஆகியோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இந்த சூழலில், கட்சி கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பதவி நீக்கம்
ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கியிருந்த நிலையில், இன்று மேலும் 2 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே. வைரமுத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி. கிருஷ்ண முரளி ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி நீக்கிய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸை மட்டும் கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கவில்லை.இதற்கான விளக்கம் கூட இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நடவடிக்கை அதிமுகவில் நிலவும் உள்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.