செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சிறிதரன் எம்.பி வலியுறுத்திய விடயம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21.8.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "செம்மணி மனிதப் புதைகுழியின் மதிலைத் தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவைச் செம்மணிக்கு அழைத்துச் சென்று அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அகழ்வுப் பணிகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக 9 நாள்களும், இரண்டாம் கட்டமாக 45 நாள்களும், மூன்றாம் கட்டமாக 56 நாள்களும் என மொத்தம் 110 நாள்களாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 584 மனித எலும்புக்கூடுகளும், 170 பிற சான்றுப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மணிப் பகுதிக்குப் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுக்கு அரசு அனுமதியளித்த போதிலும், கனடா உயர்ஸ்தானிகருக்கும் அவரது குழுவினருக்கும், ஆஸ்திரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசிடம் நிதி இல்லையாயின், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடி நிதி கோருவதோடு, தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening