செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விதிமீறல்: ஐவருக்கு ரூ.50,000 அபராதம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் ஆலயத்தின் சுற்றாடலினை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாக பேணி வருவதுடன் ஆலய சுற்றாடலானது புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத்தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முற்றாக தடை
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றாடலில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக கடந்த 20/08/2026 வியாழக்கிழமை வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சம்பந்தவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தலா 10,000 ரூபா வீதம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.