தமிழ் மக்களுக்கு சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை
"ராஜபக்சர்கள் போல் வாக்குறுதிகளை வழங்கி தமிழர்கள் உள்ளிட்ட மூவின மக்களையும் நாட்டையும் ஏமாற்றுவதுதான் ரணிலின் திட்டம்."என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும், தேசிய பிரச்சினைகளுக்கும் அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு காணப்படும் என நான் நம்புகின்றேன்' என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
ரணிலுக்கு பயம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“மக்களை ஏமாற்றும் திட்டம் எதுவும் இனிமேல் நடக்காது என்பதை ரணில் மற்றும் ராஜபக்ச சதிகாரக் கும்பல் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ரணில் - ராஜபக்ச அரசுக்குத் தேர்தல் ஒன்றின் மூலம் முடிவுகட்ட நாட்டு மக்கள் தயாராகவுள்ளனர். ஆனால், தோல்வி உறுதி என்பதால் தேர்தலை நடத்தாமல் காலத்தைக் கடத்த இந்த அரசு முயற்சிக்கின்றது.
வெற்றி நிச்சயம்
தேர்தல் ஒன்று நடந்தால் அதில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வெற்றிவாகை சூடும். எமது ஆட்சியில் ஓரிரு மாதங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை காண்போம்" என்று உறுதியளித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல்
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளரை (உள்ளூராட்சி) இன்று(20.09.2022) சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதம செயற்பாட்டு பிரதானி நளின் பண்டார,
ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.