பசிலின் கோரிக்கையை நிராகரித்த ரணில்! - ஜனவரியிலேயே அமைச்சரவை மாற்றம்
அமைச்சரவை மாற்றத்தை இந்த வாரம் மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இம்மாதம் 8ஆம் திகதி நிறைவடைந்துள்ளது. 'மொட்டு'க் கட்சியின் பேராதரவுடன் ரணிலின் வரவு - செலவுத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், புதிய அமைச்சரவையை இந்த வாரம்
நியமிக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் பசில் ராஜபக்ச கேட்டுள்ளார்.
ஆனால், அதற்கான தேவை இப்போது எழவில்லை என்றும், ஜனவரியில் தான் அமைச்சரவை
மாற்றம் இடம்பெறும் என்றும் பசிலிடம் ஜனாதிபதி கூறினார் என்று அறியமுடிகின்றது.
ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்
அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறப்போகும் அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு எம்.பிக்கள் பல பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, தற்போது வெளிவிவகார அமைச்சராக இருக்கும் அலி சப்ரிக்கு நிதி அமைச்சு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலி சப்ரிக்கு நிதி அமைச்சு
அரசமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தவிர வேறு எந்த அமைச்சையும் வைத்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் தான் இப்போது வகித்து வரும் நிதி அமைச்சை ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க, அலி சப்ரிக்கு வழங்கவுள்ளார் என்று அந்த வட்டாரம் மேலும்
தெரிவிக்கின்றது.