டிரம்பை உன்னிப்பாகக் கவனிக்காத இலங்கை அரசாங்கம்! மூடப்படும் நிலையில் தொழிற்சாலைகள் - பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குத் தேவையான எந்தவொரு முறையான திட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை வகுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
களனிப் பிரதேசத்தில் நேற்று (27.03.2026) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைவதை ஒரு வினைத்திறனான அரசாங்கம் முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும்.
நெருக்கடி
சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் டிரம்ப் போன்ற தலைவர்களின் கொள்கைகளை உன்னிப்பாகக் கவனித்திருந்தால், இவ்வாறானதொரு நெருக்கடி வரும் என்பதை அறிந்திருக்கலாம்.
ஆனால், இந்த அரசாங்கம் உலக நடப்புகளைப் புரிந்துகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையால் நுரச்சோலை மின் நிலையம் அதன் முழுத்திறனில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றும் 113 மெகாவோட் மின் உற்பத்தி குறைவாகவே பதிவாகியுள்ளது.
இந்த நிலக்கரித் திருட்டை மூடிமறைக்கவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிடுகின்றது. தரமற்ற நிலக்கரியால் மின் நிலைய உபகரணங்கள் சேதமடைவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பாரிய மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் எச்சரிக்கின்றன. விவசாயிகள் தற்போது எரிபொருள் மற்றும் உரத் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
9500 ரூபாவாக இருந்த உர மூட்டை தற்போது 15 ஆயிரம் ரூபாவைத் தாண்டியுள்ளது. கூப்பன்கள் வழங்கப்பட்டாலும் விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை. இதனால் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தொழிற்சாலைகள்
ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் கூட தற்போது மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகள் இலங்கையை விட்டு வெளியேறி ஏனைய நாடுகளுக்குச் செல்கின்றன. இது நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் வேலைவாய்ப்புகளைப் கடுமையாகப் பாதிக்கும்.
தேர்தல் காலத்தில் துறைமுக விலைக்கே எரிபொருள் தருவோம் என்று கூறியவர்கள், இன்று எதனையும் நிறைவேற்றவில்லை. இந்தியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் தமது நாட்டு மக்களுக்கு எரிபொருள் வரி நீக்கம் மூலம் நிவாரணம் வழங்குகின்றன.
ஆனால், நமது அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான யோசனைகளை நிராகரிப்பதோடு, எம் மீது சேறு பூசும் வேலையையே முன்னெடுத்து வருகின்றது. திறைசேரியிலுள்ள பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகுப்புகளை வழங்க வேண்டும்.
உரத்துக்கான 'வட்' வரியை நீக்கி, மானியத்தை அதிகரிக்க வேண்டும். 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிய இந்த 'செயற்கை வீரர்கள்' இப்போது அம்பலமாகியுள்ளனர் என்றார்.


