நாடாளுமன்றில் தேச துரோகி யார் என்பதை இன்று அல்லது நாளை தெரிந்து கொள்ளலாம் - சஜித்
இலங்கை நாடாளுமன்றில் உள்ள தேச பற்றாளர் யார்? தேச துரோகி யார்? என்பதை அறிந்து கொள்ள வேண்டிய தருணம் நெருங்கி விட்டதாக எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சஜித் பிரேமதாஸ இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்ல பிரேரணை, நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டுக்கு கொடிவினையான ராஜபக்ஸ அரசாங்கத்தை வீழ்த்தும் பயணத்திற்கு ஆதரவு வழங்கி வீதிக்கு இறங்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விசேடமாக இன்று அல்லது நாளைய தினத்திற்குள் நாடாளுமன்றில் உள்ள 225 பேரில் தேச துரோகி யார், தேச பற்றாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை உயர்த்தி இன்று சாதாரண மக்களுக்கு வாழ முடியாத நிலையை அரசாங்கம் உருவாக்கி இருப்பதாகவும், விவசாயிகளுக்கு உரத்தை வழங்காமல் அவர்களது பொருளாதாரத்தை சீர்குழைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோன்று, X Press pearl கப்பல் தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நட்டஈடு வழங்காது, சூழலை நாசம் செய்து, இலவச கல்வியை தனியார் மயப்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தையும் அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கி இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.