போலி நாடகங்களால் நாட்டு மக்களை பெலவத்தையின் சிறைக் கைதிகளாக்க அரசு முயற்சி - சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு
அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(18.09.2026) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
22 ஆவது திருத்தம்
நாட்டின் ஜனநாயக முறையானது சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய பிரதான மூன்று தூண்களையும், சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நடைமுறையில் காணப்படும் ஜனநாயக முறையையும் அதன் பிரதான தூண்களையும் அழிப்பதே தற்போதைய அரசின் நோக்கம் என்றார்.
தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்தத் தூண்களின் அதிகாரங்கள், 22 ஆவது திருத்தம் மூலம் நீக்கப்படுகின்றன என்றும், நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டு நிர்வாகத்துறையின் கைபொம்மையாக அது மாற்றப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் தனிக் கட்சி ஆட்சியை ஏற்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் பெலவத்தை கட்சித் தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
22 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, தூக்கத்திலிருந்த தரப்புகளை விழித்தெழச் செய்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளதாகவும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து சர்வதேச தரப்பினரையும் தூதுக்குழுக்களையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூகத்தை பெலவத்தை மயமாக்க அரசு நடவடிக்கை
அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை உள்ளது என்று கூறிக்கொண்டு, அந்த ஆணையைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது என்றும், இது குறித்து பொதுமக்களுக்குத் தாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இளைஞர் கழகத் தேர்தல்கள் நடைபெற்ற வேளை பெலவத்தையின் பட்டியலின் பெயரில் நியமனங்கள் வழங்கப்பட்டதை ஐக்கிய மக்கள் சக்தியினரே எதிர்த்தது என்று தெரிவித்த அவர், தற்சமயம் கிராமத்திலுள்ள சுயாதீனமாக இயங்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றைப் பெலவத்தை மயமாக்கி, தனிக் கட்சி ஆட்சிக்குக் கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார், மக்களைப் பணிய வைத்து முழு நாட்டையும் அடிபணியச் செய்யும் திருத்தமாகவே இந்த 22 ஆவது திருத்தம் காணப்படுகின்றது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் தற்போதும் பொய்யும் புரட்டுமே காணப்படுகின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கடந்த கால ஏமாற்று வேலைகளினாலேயே நாடு வங்குரோத்தடைந்தது என்றும், இதனால் விவசாயிகள் உட்பட 220 இலட்சம் மக்களும் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த கால அரசமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள் தற்போதைய ஆளும் தரப்பிலேயே இருக்கின்றனர் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி அத்தகைய காரியங்களைச் செய்யாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழரக் கட்சியிடம் கோரிக்கை - அனோஜனின் உயிரைக் காப்பாற்ற போராடும் இலங்கை மக்கள்