2000 ரூபா உதவி கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 2000 ரூபா உதவித்தொகை 575,520 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ம் திகதி வரையில் குறித்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவைப் பெறாத தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த சில நாட்களில் பிரதேச செயலக மட்டத்தில் பணம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பொது அதிகாரிகள் மூலம் இம்மாதம் 23ம் திகதி முதல் உதவித் தொகை வழங்கப்பட்டது.
கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக மொத்தம் 2,038,530 பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 376,531 குடும்பங்கள், கம்பஹா மாவட்டத்தில் 345,847 குடும்பங்கள், களுத்துறை மாவட்டத்தில் 55,425 குடும்பங்கள், கண்டி மாவட்டத்தில் 137,475 குடும்பங்கள், குருநாகல் மாவட்டத்தில் 107,677 குடும்பங்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் 107,291 குடும்பங்கள், காலி மாவட்டத்தில் 38,269 மற்றும் ஹம்பாந்தோட்டையில் 66,266 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
இந்த உதவித்தொகை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்து பிரதேச செயலகங்களின் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முழு அர்ப்பணிப்புடன் வழங்கப்படுகிறது.