கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்! சக வீரர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் டிசம்பர் 30 திகதி டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு காரில் சென்றபோது பயங்கரமான கார் விபத்தில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து டெஹ்ராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.
இதற்கமைய, தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்காணிப்பில் உள்ளார்.
அவரது கார் விபத்து பற்றிய செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்களும் பந்த் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.
அந்த வகையில், பந்தின் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர், அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு இதயப்பூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
"அண்ணன் ரிஷப்பந்த். நாங்கள் அனைவரும் உங்களுக்குப் பின்னால் இருக்கிறோம்," என்று வார்னர் பந்துடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

