புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள்
அரசியல் என்பது சூழல் சார்ந்தது. சூழலைக் கடந்து அல்லது தவிர்த்து அரசியல் செய்ய முடியாது. அரசு என்பது நிலம் சார்ந்தது, நிலம் என்பதற்குள் கடலும், வானமும் உள்ளடங்குகின்றன. கடலிலோ வானத்திலோ அரசமைக்க முடியாது. ஆகையால் நிலமும் நிலம் சார்ந்த அமைவிடமும் அரசுகளை தீர்மானிக்கின்ற, கட்டமைக்கின்ற முதல் நிலை நிர்ணய காரணியாகும். அதனையே புவிசார் அரசியல் என்கிறோம்.
புவிசார் அரசியலின் நிர்ணய அம்சங்களை புரிந்து கொள்ளாமல் ஒடுக்கப்படும் ஓர் தேசிய இனம் விடுதலைக்கான இலட்சியத்தில் வெற்றி பெற முடியாது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் புவிசார் அரசியலை 1980 களின் ஆரம்பத்தில் தான் அறிவியல் சமூகம் புரிந்து கொண்டிருப்பினும் அது அரசியல் செயல் வடிவத்திற்கு செல்லாமையின் விளைவுகளை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கண்டு கொண்டது.
புவிசார் அரசியலின் இயங்கு விசைதான் தமிழினத்திற்கு தொடர் தோல்விகளை பரிசளித்திருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது முள்ளிவாய்க்கால் பேரவலவத்தின் பின்னர் கடந்த 16 ஆண்டுகளாக தமிழ அரசியல் தலைமைகள் எனப்படுவோர் புவிசார் அரசியலை புரிந்து கொள்ளாமல் வெறுமனே நாடாளுமன்ற அரசியலையும், சர்வதேச அரசியல் என்று ஒரு ஒப்பாரி அரசியலையும் முன்னெடுத்து எதனையும் பெறமுடியவில்லை.
சர்வதேச எதிர்ப்புவாதம்
யார் நண்பன், யார் எதிரி, யார் அரைவழி நண்பன், யார் முழுநேர நண்பன் என்பது அறியாமல் அண்டைநாட்டு எதிர்ப்புவாதம், சர்வதேச எதிர்ப்புவாதம் பேசிக்கொண்டு அதேநேரம் சர்வதேச விசாரணை வேண்டுமென்று முன்னுக்கு பின் முரணாக பேசி திசையறியாமல் பயணித்து இப்போது ஒரு திடீர் திருப்பத்துக்கும், குத்துக்கரணமும் அடித்திருப்பு இவர்கள் நல்லதோ, கொட்டதோ என்பதையே அறியாமல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் போல தோன்றுகிறது.
அதன் வெளிப்பாடு தான் இந்திய அரசிடம் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை கொடுக்கும்படி வேண்டுவதற்காக தமிழ்த் தேசியப் பேரவை 16.12.2025 இந்தியாவுக்கு பயணமாக இருக்கிறது.

மேற்படி பயணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி) உத்தியோகபூர்வ பேச்சாளர் ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை வேண்டி தமிழகம் சென்றிருப்பது ஆரோக்கியமான அரசியல் முடிவும் செயற்பாடும்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆயினும் மேற்படி தமிழ் அரசியல் பிரமுகர்கள் கடந்த 16 ஆண்டுகளாக மிகக்கடுமையாக இந்திய எதிர்ப்புவாதம் பேசியவர்கள், செயற்பட்டவர்கள். இப்போது திடீரென மனம் திருந்திக் குணப்பட்டு இந்திய ஆதரவை வேண்டுகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவை ஒரு நட்பு நாடாக, நட்பு சக்தியாக இதயசுத்தியுடன் இவர்கள் ஏற்றுக்கொண்டுதான் இந்த அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறார்களா? என்பது இந்திய அரசாலும், தமிழக அரை அரசாலும் நம்பப்பட வேண்டும் என்பது இங்கே முன் நிவந்தனையாக இருக்கிறது.
நாம் சரியாக நடக்கிறோம் என்பது மாத்திரமல்ல, நாம் சரியாக நடந்து கொள்கிறோம் என்று மற்றவர்களால் நம்பப்படவும் வேண்டும். அத்தகைய நடவடிக்கை ஒன்றுதான் அர்த்தபுஷ்டியான செயலாகவும் அறுவடையைத் தரக்கூடிய செயலாகவும் அமையும்.
இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக தமிழகம் சென்ற தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரமுகர்கள் இன்றையதினம்(18.12.2025) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் "ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஏக்கியராஜ்ய அரசியலமைப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
ஈழத் தமிழ்க் கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அவரிடம் கோரினோம்". என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் அரசறிவியல் அறிவு வளர்ச்சியில் புவிசார் அரசில் விழிப்புணர்வு மலர்ந்த காலம் பற்றியும் ஆய்வது அவசியமானது.
ஆயுதப் போராட்டம்
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் வீறுகொண்டழுந்த 1980களின் ஆரம்பத்தில் தமிழ் சமூகத்தில் அரசரவியல் ஒரு புது மறுமலர்ச்சியை காணத் தொடங்கியது.
அந்தக் காலகட்டத்தில் யாழ்-பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்ட அறிவுஜீவிகளும், மாணவர்களும் இலங்கை இன பிரச்சனை என்பது ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், அது இந்து சமுத்திரம் சார்ந்த பிரச்சினை என்றும், அது இந்தியாவுடனும், பார்க்க நீர் இணையுடனும் இணைக்கப்பட்ட பிரச்சனை என்றும் இனம் கண்டு அதனை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறவில்லை.
ஆயினும் அந்தக் காலத்தில் அந்தக் கருத்துக்கள் அரசியல் சக்திகளிடம் சென்று அரசியல் செயல்மயப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானது.ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் புவிசார அரசியல் என்ற சொற்பதத்தை அறியாத காலத்தில் அதனை துணிவுடன் வெளிக்கொணர்ந்த பெருமை யாழ் பல்கலைக்கழகச் சமூகத்தையே சாரும்.

"இந்துமகா சமுத்திரமும் இலங்கை இன பிரச்சினையும்"- மார்ச்1987 உதயன் (திருநாவுக்கரசு) -விஜயன் (ஜெயராஜ்) ஆகிய இருவரால் எழுதப்பட்ட இலங்கை இனப் பிரச்சினையும் அதன் சூழலியல் பற்றியும் மிகச்சரிவர வெளிப்படுத்திய நூலாக அமைந்தது. அந்த நூல் “ஓர் இலட்சியமானது தன்னியல்பிலும், எழுமாத்திரத்திலும் வெற்றி பெற முடியாது.
இலட்சியத்தின் வெற்றியானது வாழ்நிலை, எதார்த்தம், சாத்தியக்கூறு, வாய்ப்பு, செயல்முறை என்பவற்றிலேயே பெரிதும் தங்கி உள்ளது" எனக் குறிப்பிடுகின்றது.
அந்த நூலின் இறுதி பகுதியில் ““ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேச நிலைமை, இந்திய பாதுகாப்பு ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழீழ விடுதலைக்கான ஒரு திட்டத்தையும், வெளியுறவு கொள்கையையும் முன்வைக்க வேண்டியதே நமது இன்றைய முதன்மையான பணியாகும்.
இவற்றைச் சரியான முறையில் வகுத்து அதற்குரிய சரியான வேலை திட்டத்தையும், நடைமுறையையும் கொள்வோமாயின் நமது நலனுக்குப் பாதகமாய் நிகழக் கூடியவை என்று அடையாளம் கண்டு விளக்கப்பட்டுள்ள தடைகளை எல்லாம் கடந்து முன்னேற முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் அதன் இறுதிப் பந்தியில் "தமிழீழ மக்களை ஜனநாயகத்தால் ஐக்கிய படுத்தல், தமிழக மக்கள் மீதும், இந்திய மக்கள் மீதும் தாங்கி நின்று இந்திய அரசை ராஜதந்திரத்தாலும், சூழலியலாலும் வென்றெடுத்தல், ஏகாதிபத்தியத்துடன் கூடிச் செயற்படும் இலங்கை ஒடுக்குமுறை அரசை ஆயுதத்தால் தோற்கடித்தல் ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த வழியே எமது இலக்கியத்தை அடைவதற்குரிய ஒரே மார்க்கமாகும் என அந்த நூலில் அழுத்தம் திருத்தப்பட குறிப்பிடப்பட்டிருக்கிறது.
37 வருடங்கள் கடந்தும் மேற்குறிப்பிடப்பட்ட முதல் இரண்டு வழிகளும் இன்றைய காலத்திற்கும் பொருத்தமானதாக உள்ளது என்பதுதான் இங்கு கவனத்திற்குரியது. அத்தோடு அந்த நூல் முற்றிலும் புவிசார் அரசியலையும், பூகோள அரசியலையும் ஈழத் தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக சுட்டி நிற்கின்றது.
அதேபோல 2006இல் வன்னியை யுத்தமேகம் சூழ்ந்திருந்த வேளையில் கிளிநொச்சியில் இருந்து மு திருநாவுக்கரசு அவர்கள் ஈழத் தமிழனுடைய விடுதலையும் பாதுகாப்பிற்குமான திறவுகோல் தமிழகத்தின் சென்னையில் தான் உள்ளது என்பதை "சென்னையில் திறவுகோல்." என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் 18.11.2006 திகதி பதிப்பில் வெளியாகி இருந்தது.
தமிழீழ மக்கள்
இக்கட்டுரையை பின்னர் புதினம் இணையத்தளமும் மறுபிரசுரம் செய்திருந்தது. அந்தக் கட்டுரையில் உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும்". என்றும் "தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது." என்றும் இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது". என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
மேலும், அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது. இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது" எனவும் கோடிட்டு காட்டியிருந்தார்.

தேசிய இனப்பிரச்சினை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்". என்றும் "ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடெல்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும்" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த அடிப்படை உண்மை இப்போது தான் தமிழ் தலைமைகள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது சற்று மகிழ்ச்சி கூறியது தான்.
ஆயினும் இந்தியாவை வென்றெடுப்பதற்கான பயணத்தில் கடந்த கால கசப்புணர்வுகளை கடந்து, சரி தவறுகளை ஏற்றுக் கொண்டு, மாறிவரும் உலக ஒழுங்கிற்கும், இந்து சமுத்திர வலுச்சமநிலைக்கு ஏற்ற வகையில் நம்மை நாமே தயார்படுத்தி மறு சீரமைத்து வெற்றிக்கான பாதையில் செல்வதற்கு ஈழத்தமிழர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதும் உண்மையே.
2010ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்து சமுத்திரத்தில் புதிய வலுச்சமநிலை தோன்றி விட்டது. இந்து சமுத்திர நாடல்லாத சீனா இப்போது இந்து சமுத்திரத்தில் உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்து சமுத்திரம் உலக வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறத் தொடங்கிவிட்டது.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து சீனா இந்த சமுத்திரத்தில் தன்னை விஸ்தரிக்கவும், நிலைப்படுத்தவும் தொடங்கிவிட்டது என்பது தான் இங்கே முக்கியமானது.
கடந்த இரு வாரங்களில் இலங்கை தீவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தமும் வெள்ளப்பெருக்கும் இலங்கைத் தீவை மோசமாக தாக்கிய போது வல்லரசுகள் விழுந்தடித்து முண்டியடித்துக் கொண்டுநிவாரணப் பணிகளில் தமது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதை நாம் கண்டோம்.
அமெரிக்காவின் விமானப்படையினர் பலாலி விமான நிலையத்தில் நிவாரண பொருட்களுடன் தரையிறங்கி தமது மதிநுட்பவலு மூலோபாய செல்வாக்கு(Smart Power strategic influence) வல்லமையை வெளிப்படுத்தினர்.
அவ்வாறே இந்தியாவும், பாகிஸ்தானும் தத்தமது வல்லமைக்கு ஏற்றவாறு மென்வலு மூலபாய செல்வாக்கை(Soft power strategic influence) பயன்படுத்தி இலங்கை தீவில் தமக்குரிய செல்வாக்கு வலுவை வெளிப்படுத்தவும் தவறவில்லை.
அதேசமயம் சீனா எழுந்துவரும் சக்தி (Rising Power) என்ற தோரனையில் அமெரிக்க ஆதிக்கத்தை சவால்விடக்கூடியவாறு கடன்கட்டமைப்பு, முதலீடு, துறைமுக அணுகல் என நீண்டகால புவியியல் பிடிப்பிற்கான "கடன் ராஜதந்திர(Debt diplomacy) அணுகுமுறையில் நிவாரன பணியில் ஈடுபட்டு மென்வலு மூலபாய செல்வாக்கை வெளிப்படுத்தியது.
அமெரிக்கா- இலங்கை
மொத்தத்தில் இலங்கைத்தீவில் இந்தோ–பசிபிக் அரசியல் என்பது இந்தியா–அமெரிக்கா–சீனா என பெரும் சக்திகளின் ஆதிக்கப் போட்டியும், சிறிய நாடுகளின் அரசியல் புத்திசாலித்தனமும் சந்திக்கும் அரங்கமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்திய தரப்பிலும், ஈழத்தமிழர் தரப்பிலும் பல்வேறுபட்ட அக்கப்போர்கள் நிகழ்கின்றன.
அமெரிக்கா இலங்கையில் காலொன்று விட்டது என்றும், சீனா போட்டி போடுகிறது என்றும், இந்தியா செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கிறது என்றும் பலவாறாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆய்வுகள் புவிசார் அரசியலையோ, அல்லது ஈழத் தமிழரின் இருப்பிடம் சார்ந்த, அல்லது அரசியல் தத்துவம் சார்ந்தோ எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் எழுந்த மாத்திரத்தில் கற்புலனுக்கு தெரியக்கூடிய காட்சிகளையும், சம்பவங்களையும் வைத்துக்கொண்டு பேசப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய தரப்பில் காலணித்துவகால மனவியல்பிலிருந்தும், பனிப்போர் மனவியல்பிலிருந்தும் விடுபடாமல் அந்தக் காலக்கட்டத்துக்குரிய கருத்து மண்டலத்தையே இப்போதும் தாங்கியவாறு கருத்துக்கள் வெளிவருகின்றன. இது இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஆய்வாளர்களுக்கும் பொருத்தமானதாகவே உள்ளது.
இப்போது நாம் காலணித்துவ காலத்தை கடந்து, பனிப்போர் காலத்தையும் கடந்து, பனிப்போருக்கு பின்னான காலத்தையும் கடந்து, கொரோனாவுக்கு பின்னான காலத்தில் நிற்கிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய இந்த காலகட்டத்துக்குரிய அரசியல், சமூகவியல் நிலையையும், வல்லரசுகளினதும், பிராந்தி வல்லரசுகளினதும் தேசிய நலன்கள்சார்ந்தும், புவிசார அரசியல் நிர்ணயம் சார்ந்தும் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினையையும், ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசையையும் நோக்கப்பட வேண்டும்.அதுவே ஈழத் தமிழர்களுக்கு நலன் பயக்கவல்லது.
இந்தியாவின் வல்லமை
பனிப்போர் காலத்தில் இந்தியா அமெரிக்காவின் எதிரி நாடாக இருந்தது. அதேசமயம் சீனா அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்தது. பனிப்போரின் பின்னான காலத்தில் இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாகவும், சீனா அமெரிக்காவின் எதிர்நாடாகவும் மாறிப்போயிருந்தது.
அந்த நிலைமை பனிப்போரின் பின் பின்னான காலத்திலும் தொடர்ந்தது. ஆனால் கொரோனாவுக்கு பின்னான காலத்தில் சீனா அமெரிக்காவின் நிரந்தர எதிரி நாடாக தலையெடுத்துவிட்டது.

ஆனால் இந்தியா தவிர்க்க முடியாமல் அமெரிக்காவின் நிரந்தர நட்பு நாடாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றி விட்டது. பனிப்போருக்கு பின்னான காலத்தில் இந்து சமுத்திரத்தின் ஆளுகைப் போட்டியில் அமெரிக்கா இந்தியாவுடன் கூட்டுச்சேர்ந்து இந்தியா முன்னே அமெரிக்கா பின்னே என்ற கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இந்து சமுத்திரத்துக்குள் சீனா நுழைவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை.
முடியாமைக்கான காரணம் இந்தியாவின் வல்லமை அற்ற தன்மை என்பதிலும் விட இந்தியா கடல்சார் கொள்கையில் திடமாகவும், முழுமையாகவும் இல்லை என்பதே காரணமாகும்.
எனவேதான் 2010இன் பின் இந்துசமுத்திரத்தில் அமெரிக்கா முன்னே இந்தியா பின்னே என்ற கொள்கையை அமெரிக்கா எடுத்து இந்தியாவை அரவணைத்து இந்து சமுத்திரத்தை தமது முழுபாய செல்வாக்குக்குள் வைத்திருப்பதற்கான வியூகம் வகுக்கப்பட்டு அமெரிக்கா இந்து சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது.
இந்த அடிப்படையில் தான் இலங்கைத் தீவில் பலாலி விமானப்படை தளத்தில் அமெரிக்க விமானம் முதன் முறையாக இறங்கியமையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அமெரிக்கா கடல், வான், தரை ஆகிய மூன்று வாயிலாகவும் இலங்கைத் தீவில் செல்வாக்கு செலுத்துகிறது.
இராஜதந்திர முறைமை
இந்த அரசியல் மெய்யலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தமிழ் அறிவியல் சமூகம் தமக்கான நலன்களை அடைவதற்கான மூலோபாயங்களை வகுக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கிறது. பரஸ்பர நலன்களே உறவுகளை மலரச்செய்யும். நலன்கள் இன்றி உறவுகள் இல்லை.
ஆகவே வல்லரசுகளாயினும் சரி, பிராந்தி அரசுகளாயினும் சரி, அண்டை நாடாயினும் சரி அவரவர் நலன்களை இனம் கண்டு நமக்குரிய நலன்களோடுபொருத்தி பரஸ்பர நலன்களை அனுபவிப்பதுவே இன்றைய அரசியல் ராஜதந்திரம் ஆகும்.

அத்தகைய ஒரு ராஜதந்திர முறைமை தமிழ் அரசியலுக்கு மிக அவசியமானது. பார்க்குநீரினை தமிழ் மக்களுக்கு வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது. சிங்களவர்களுக்கும் அவ்வாறே உள்ளது.
பாக்குநீரிணை தான் சிங்களவர்களுக்கு ஒரு அரசை கொடுத்தது. அதுதான் பௌத்தத்தை இலங்கையில் பாதுகாத்தது. அதே நேரத்தில் பாக்குநீரினையின் இரு மரங்கிலும் தமிழ்த்தேசிய இனம் இருப்பது சிங்கள அரசுக்கு சாபமாக உள்ளது.
பாக்குநீரிணை இல்லையேல் தமிழ்த்தேசிய இனம் இரண்டுபடாமல் ஒன்றுபட்டு தனியான அரசை கொண்டிருந்திருக்கும். அதேநேரம் பாக்குநீரிணை இல்லையேல் பௌத்தமதம் இல்லாத ஒழிந்திருக்கும். சிங்கள இனம் கரைந்து போய்யிருக்கும்.
ஆனால் பாக்கு நீரிணை இருந்ததனால் இலங்கைத்தீவில் சிங்கள பௌத்தர்கள் அரசை பெற்றதோடு, இலங்கைத் தீவை முழு சிங்கள பௌத்த நாடாக்குவதற்காக ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்கின்றனர். இவை அனைத்தும் பாக்கு நீரினை அரசியல் என்ற புவிசார் அரசியலின் விளைவு.
இந்த புவிசார் அரசியலை புரிந்து கொண்டு தமிழ்த்தேசிய இனம் தன்னைத் தகவமைக்க வேண்டியுள்ளது. ஈழத் தமிழர்களுடைய இனப் பிரச்சினை என்பது வெறுமனே ஈழத் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் மாத்திரமல்ல. அது இந்து சமுத்திரத்தின் அமைதிக்கானதும், ஜனநாயக மீட்பிற்கானதும், நிரந்தர சமாதானத்திற்குமான போராட்டமாகும்.
இலங்கை தீவில் ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் இல்லையேல், ஈழத்தமிழரது பிரச்சினை தீர்க்கப்படாவிடத்து, ஈழத்தமிழருடைய தேசிய அபிலாசைகள் வென்றெடுக்கப்படாவிடத்து இந்து சமுத்திரத்திற்கு அமைதியும் இல்லை. சமாதானமும் இல்லை.
ஆகவே ஈழத் தமிழர்கள் பிராந்திய வல்லரசை தமக்கு சாதகமான செல்வலைக்கு இட்டுச் செல்வதற்கான வேலை திட்டமாக தமிழக அரை அரசிடமும், இந்திய அரசிடமும் அழுத்தங்களை பிரயோகிப்பதும், உறவினை பலப்படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 21 December, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri